வீடு!
சின்னச் சின்ன குட்டிப் பாப்பாக்களே! இப்போது உங்களிடம் ஒரு கேள்வி. பதில் சொல்ல முடியுமா பாருங்களேன்.மனிதர்கள் ஏன் வீடுகளில் வசிக்கின்றனர்? மிருகங்கள் ஏன் காடுகளிலும், மலைகளிலும் வசிக்கின்றன? உங்களுக்குத் தெரியுமா? நான் சொல்லட்டுமா?பல கோடி வருடங்களுக்கு முன் மனிதர்கள், மிருகங்களுடனும், பறவைகளுடனும் சேர்ந்தே குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுக்க, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்களையும், மட்டைகளையும் வைத்து ஒரு புலி, ஒரு யானை, ஒரு மனிதன் மூவரும் சேர்ந்து ஒரு அழகான வீடு கட்டிக் கொண்டனர். அவ்வீடு மிகவும் அழகாக அமைந்து விடவே மிகவும் மகிழ்ச்சியுடன் அம்மூவரும் அவ்வீட்டில் வசித்து வந்தனர். திடீரென அம்மூவருக்குள் ஒரு களங்கம் புகுந்துக் கொண்டது.'ஏன் இந்த வீடு கட்டும் யோசனையை சொன்னவனே நான்தான். இந்த வீட்டில் தனியே நான் மட்டும் வசித்தால் என்ன?' என்று மனிதன் நினைக்க ஆரம்பித்தான்.'ஆமாம்... இந்த வீடு கட்ட தேவையான அனைத்து சாதனங்களையும் நான் அல்லவா அந்த கொட்டும் மழையில் எத்தனை சிரமப் பட்டு தூக்கி வந்தேன்... அதனால், இந்த வீட்டில் நான் மட்டுமே வசித்தால் என்ன?' என்று புலி மனதில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டது.'ஓ! இந்த வீடு கட்டும் போது இவர்களுக்கு நான் எத்தனை வேலைகள் செய்தேன்.'டேய்! அந்தக் கட்டையை எடுத்து வாடா' என்பான் மனிதன்... 'டேய்! இந்த மரச்சாமான் களை இழுத்து நிறுத்தி வைத்து அப்படியே நில்லுடா என்று இரண்டு பயல்களும் என்னை எப்படியெல்லாம் மிரட்டி உருட்டி, மணிக் கணக்கில் அன்ன ஆகாரமின்றி நிற்க வைத்தனர். இத்தனை கஷ்டப்பட்ட எனக்குத் தான் இந்த வீட்டில் வசிக்கும் உரிமை நிறைய இருக்கிறது...' என்று நினைத்தது யானை.ஒருநாள் மூவரும் வெளிப்படையாக தங்களின் எண்ணங்களை வெளியிட்டனர். கடைசியாக ஒரு சமரச முயற்சி...''உங்கள் இருவரையும் நான் இங்கிருந்து விரட்டி விட்டால் வீடு எனக்குதான் சொந்தம்!'' என்றது புலி.''அதுவும் சரிதான்... உங்கள் இருவரையும் நான் விரட்டி விட்டால்... அப்புறம் இங்கு வசிக்கும் உரிமை எனக்கு மட்டும்தான் சரியா?'' என்றான் மனிதன்.புலியும், யானையும் ஒப்புக் கொண்டன.''முதலில் ஜெயிக்கப் போவது நான்தான்!'' என்று மிக கம்பீரமாகச் சொல்லிக் கொண்டே களத்தில் இறங்கியது புலி.ஏகமாக உறுமிக் கொண்டு வாலை சுழற்றி சுழற்றி, வீட்டிற்குள் வீட்டைச் சுற்றிக்கொன்று குதித்து, குதித்து, மிதித்து தூண்களை ஆட்டி ஏக ரகளை அடித்து, குறுக்கும், நெடுக்குமாய் ஓட, ஊஹும் எவ்வித பயனும் இல்லை. மனிதனும், யானையும் இம்மியும் அளந்து கொடுக்கவே இல்லை. பல மணி நேரம் இப்படி ருத்ர தாண்டவம் ஆடி, மிகவும் களைத்துப்போய், அப்படியே தொப்பென்று கீழே விழுந்து, ''நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்!'' என்று சொல்லி அப்படியே படுத்துக் கொண்டது.உடனே மனிதன் யானையை பார்த்து, ''எங்கே உன் சாமர்த்தியத்தை காட்டு பார்க்கலாம்,'' என்றதும், இதோ இன்னும் ஐந்தே நிமிடம்... நீங்கள் இருவரும் இங்கிருந்து வெளியேறத் தான் போகிறீர்கள் என்று சொல்லி விட்டு, வாலை சுழற்றிக் கொண்டு புயல் வேகத்தில் வெளியே வந்த யானை பக்கத்திலிருந்த குன்றை வாலால் ஓங்கி ஓங்கி அடிக்க, குன்று சிதிறி கற்கள் தாறுமாறாக அங்கும், இங்கும் விழுந்தன. படுகோரமாக குரல் எழுப்பிக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்து ரகளை அடித்தது. பல மணி நேரம் இந்த கோர ஜால வித்தைகள் செய்தும் ஒரு பயனும் இல்லை. மனிதனும், புலியும் மிக ஏளனமாக சிரித்துக் கொண்டனர்.''சரி. நான் தோற்றுவிட்டேன்!'' என்று சொல்லி மனிதனைப் பார்த்து, ''இப்போது உன் முறை. எங்கே உன் சாமர்த்தியத்தைப் பார்க்கலாம்,'' என்றது.உடனே மனிதன் களத்தில் குதித்தான். சுறு சுறுப்பானான். வீட்டைச் சுற்றிலும் சருகுகளை குவித்தான். கற்களை உரசி தீ உண்டாக்கி, சருகுகளை கொளுத்தினான். காய்ந்த சருகுகள் எரிய தொடங்கின. ஈர சருகுகள் ஏகமாக புகையைக் கிளப்பின. வீட்டிற்குள்ளும் ஏகமாக தீ பரவ ஆரம் பித்தது. வீட்டினுள் முடங்கிக் கிடந்த புலியும், யானையும் புகை மூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டு மூச்சு திணறி, உள்ளேயும், வெளியேயும் சூழ்ந்துள்ள தீ பொறிகளைக் கண்டு மிரண்டு போய், இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற பயத்தில் மின்னலாய் வெளியே ஒரே தாவாகத் தாவி, யானையும் புலியும் ஆளுக்கொரு பக்கமாக ஓடி காட்டுக்குள் தஞ்சம் புகுந்தன.'அப்பப்பா... இத்தனை இதமான காட்டுக் குள் வாழ்வதை விட்டு விட்டு, மடத்தனமாக நான் ஏன் அந்த சின்ன சிறு வீட்டில் முடங்க வேண்டும்,' என்று ஞானோதயம் பெற்றது யானை.'ஓ! இத்தனை சிறப்பான காற்றை சுவாசித்துக் கொண்டு, இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே காலாற நடப்பதை விட்டு விட்டு, மூச்சுத்திணற முட்டுக்கள் ஒருங்க நான் ஏன் அந்த சின்னக் குடிசையில் ஒண்ட வேண்டும்' என்று தன் விடுதலையை பாராட்டிக் கொண்டது புலி.மனிதன் மனிதனோடுதான் வீடுகளில் சவுகரியமாக வாழ வேண்டும். எதற்காக விலங்குகளுடனும், பட்சிகளுடனும் ஒரே குகையில் அடைந்து கிடக்க வேண்டும் என்று எண்ணிய அவன், தன் இனத்தவர் வீடு கட்டி வாழ முன்னோடியானான். ***