இளஸ்... மனஸ்... (45)
அன்பு மிக்க பிளாரன்ஸ்...நான், 18 வயது மகளின் தாய். என் மகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளாள்; 10ம் வகுப்பில், 86 சதவீதம் மதிப்பெண் பெற்றாள். 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, தமிழை, மொழி பாடமாக படித்தாள். பின், 10ம் வகுப்பு வரை, ஹிந்தியை மொழிப் பாடமாக கற்றாள். கணிதம், உயிரியல் பாடத்தில் விருப்பம் கொண்டவள்; இளங்கலையில், பொறியியல் படிக்க விருப்பமில்லை; மத்திய அரசு பணியில் சேரும் ஆர்வம் உள்ளது.பி.ஏ., டிபென்ஸ் படிப்பு அவள் கனவிற்கு சரியாக வருமா... தமிழகத்தில், நான்கு கல்லுாரிகளில் மட்டுமே, இந்த பாடப்பிரிவு உள்ளது. இதில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டுமா...குடிமைப் பணிக்கான, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவும் விரும்புகிறாள். திருச்சி, தஞ்சாவூர், சென்னை மற்றும் கோவை நகரில், எந்த கல்லுாரியில் சேர்ந்தால், ஐ.ஏ.எஸ்., கனவை நனவாக்கலாம். யு.பி.எஸ்.சி., தேர்வு பற்றியும், கல்லுாரியில் எந்த பாடப்பிரிவை படித்தால் உகந்தது என அறிவுரைத்து வழி காட்டுங்கள் சகோதரி.மகள் படிப்புக்கு உதவும் வகையில் ஆலோசனை கேட்டுள்ள சகோதரியே...செல்ல மகள் முன்னேற்றம் குறித்த அக்கறை, கடித வரிகளில் தெரிகிறது. எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு முடிவெடுத்தால், அதை செயல்படுத்தும் போது, எவ்வித தடுமாற்றமும் ஏற்படாது. மகளுக்காக நீ எடுக்கும் முயற்சியும், அத்தகையது தான். ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்து சில அடிப்படை விபரங்களை பார்க்கலாம்... மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, யு.பி.எஸ்.சி., இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவு பணி - ஐ.எப்.எஸ்., இந்திய போலீஸ் பணி - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் நிர்வாக பணிகளுக்கான தேர்வை, ஆண்டு தோறும், மூன்று கட்டங்களாக நடத்தி வருகிறது.இது தொடர்பான விளம்பரங்கள், பத்திரிகைகளில் வெளியாகும். 21 முதல், 30 வயதுள்ளவர்கள், இந்த தேர்வு எழுதலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பு, 35; இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 33 என சலுகை உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; ஒருவர், நான்கு முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர் தேர்வு எழுதுவதில் கட்டுப்பாடு இல்லை; இதர பிற்படுத்தப்பட்டோர், ஏழு முறை முயற்சிக்கலாம்.நாட்டு நடப்பு, பொது அறிவு குறித்த விவரங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தயார்படுத்த பல பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன; அவற்றில் சேர்ந்து படிக்கலாம். அடுத்து, பி.ஏ., டிபென்ஸ் அண்டு ஸ்ட்ரேடஜி படிப்பு பற்றிய விவரம்:சென்னை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லுாரி, வேளச்சேரி, குருநானக் கல்லுாரி, வேலுார், திருவள்ளுவர் பல்கலைகழகத்துக்கு உட்பட்ட ஊரிஸ் கல்லுாரி ஆகியவற்றில் இந்த பாடத் திட்டம் உள்ளது. ராணுவம், அரசியல், அறிவியல், வரலாறு மற்றும் பாதுகாப்பு போன்ற பாடங்களை அடிப்படையாக படிக்க வேண்டும். போர் மற்றும் அமைதியின் அடிப்படை, இந்தியாவில், 15ம் நுாற்றாண்டு வரை நிலவிய ராணுவ நடைமுறை, அரசியல் கோட்பாடு, சுற்றுச்சூழல் கல்வி போன்றவற்றில் பாடங்களை முதன்மையாக படிக்கலாம். இந்த படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மூன்றாண்டுகள் படித்து, பட்டம் பெறுவோருக்கு, ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உன் மகள் நன்கு படித்து, உயர் பதவியில் அமர வாழ்த்துகள் - பிரார்த்தனைகளுடன், பிளாரான்ஸ்.