உள்ளூர் செய்திகள்

சின்ரல்லா! (4)

முன்கதை: தாயை இழந்த சின்ரல்லா, சித்திக் கொடுமையால் அவதிப்பட்டாள். உதவ வந்த தேவதை, தங்க செருப்புகளை வழங்கியது. அவற்றை அணிந்து, வானில் பறந்த போது, ஒற்றை செருப்பை தொலைத்தாள். அதைக் கண்டெடுத்த இளவரசன் பெண்ணை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். இனி - காவலர்கள், 'யாரந்த தேவதை போன்ற அழகி... ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்...' என துருவித்துருவி விசாரித்தனர்.திணறினாலும் சுதாகரித்தபடி, 'ஒன்றுமில்லை... வீட்டின் வேலைக்காரி அவள். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவள். கதவை திறந்து வெளியே வந்தால், கடித்து விடுவாள். எனவே பயந்து, பூட்டி வைத்துள்ளேன்...' என்றாள் ரேணியா.சின்ரல்லாவின் கபடமற்ற முகமும், சோகம் ததும்பும் கண்களும் அந்தக் கூற்று பொய் எனக் காட்டியது. அவள் சொன்னதை நம்பவில்லை காவலர்கள்.சற்று கடுமையாக, 'அந்த பெண்ணை வெளியே வர சொல்...' என்றனர்.மறுத்து, எதிர்ப்பு தெரிவித்தாள் ரேணியா.ஏதோ சூழ்ச்சி நடப்பதை உணர்ந்தனர் காவலர்கள். ரேணியாவையும், அவள் மகளையும் பிடித்து துாணில் கட்டினர். பின், சின்ரல்லாவை அடைத்திருந்த அறை வாசலுக்கு வந்து, பூட்டை உடைத்தனர்.சின்ரல்லாவின் தோற்றம் அழகிய சிலை போல் இருந்தது. அவள் பயந்தபடி நின்றாள். வெளியே அழைத்து வந்தனர் காவலர்கள்.ரேணியாவும், ஜெசிந்தாவும் அவளைக் கண்களால் மிரட்டினர்.'எதுவும் சொல்ல கூடாது' என, சைகை காட்டினர்.மிரண்டிருந்த சின்ரல்லாவுக்கு, காவலர்கள் தைரியம் ஊட்டினர். இளவரசர் கொடுத்திருந்த தங்கச் செருப்பை எடுத்தனர்.அதைக் கண்டதும் சின்ரல்லா மகிழ்ந்து, 'தவறிய என் தங்கச் செருப்பு கிடைத்து விட்டது; மீண்டும் அவற்றை அணிய வாய்ப்பு கிடைத்தது. தேவதை தந்த வாழ்க்கையை பெறுவேன்...' என்று உற்சாகத்துடன் கூறினாள்.அந்த தங்கச் செருப்பை, சின்ரல்லா காலில் அணிவித்தனர் காவலர்கள்.என்ன ஆச்சரியம்... சொல்லி வைத்து செய்தது போல கச்சிதமாக அவளுக்கு பொருந்தியது. காவலர்களும், தளபதியும் ஆனந்த கூச்சலிட்டனர். சின்ரல்லா முன் மண்டியிட்டு, மரியாதையுடன் வணங்கினர். பின், 'இளவரசியே... இன்னொரு தங்கச் செருப்பு உங்களிடம் இருக்குமே... அதை எடுத்துக் கொள்ளுங்கள்; அரண்மனையிலிருந்து பல்லக்கு தங்களை தேடி வரும்; அரச மரியாதையுடன் அழைத்துச் செல்வோம்...' என்றனர்.தேவதை அருளால் கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தாள் சின்ரல்லா.உடனடியாக சின்ரல்லாவிற்கு காவல் பலப்படுத்தப் பட்டது. காவலர்களில் சிலர், 'இளவரசி வாழ்க...' என முழங்கியபடி, அரண்மனைக்குச் சென்றனர்.கொடுமைகள் அனுபவித்து வந்த சின்ரல்லாவுக்கு அதிர்ஷ்டம் வந்தது; அந்த நாட்டு இளவரசரை மணக்கும் வாய்ப்பு கிட்டியது.தங்க செருப்புக்கு உரிய அழகிய பெண்ணை கண்டுபிடித்த விபரத்தை, இளவரசரிடம் தெரிவித்தனர். மிகவும் மகிழ்ந்தார். விவரத்தை, மன்னரிடம் சொன்னார்.ரேணியா, ஜெசிந்தாவின் சூழ்ச்சியை அறிந்து, கைது செய்து இழுத்து வர கட்டளையிட்டார் மன்னர். பின், சின்ரல்லாவை அழைத்து வர பல்லக்கை அனுப்ப உத்தரவிட்டார்.இனிய பரிசாக ரத்தினங்களையும் தட்டுகளில் வைத்து அனுப்பினார். அரண்மனைக்கு, குதுாகலத்துடன் புறப்பட்டாள் சின்ரல்லா. கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்தினர் மக்கள்.பின்னால், ரேணியா, ஜெசிந்தாவை விலங்கிட்டு இழுத்து வந்தனர்.சின்ரல்லாவை கொடுமைப்படுத்தியது அறிந்து, 'ரேணியா ஒழிக... இளவரசி சின்ரல்லாவை மறைத்து வைத்தவர்களை தண்டிக்க வேண்டும்...' என கோஷம் போட்டனர் மக்கள்.அரண்மனைக்கு வந்தாள் சின்ரல்லா. அரச குடும்பம் வரவேற்றது. அவளது அழகு கண்டு லயித்துப் போயினர்.அவள் வைத்திருந்த தங்கச் செருப்பையும், இளவரசர் கையில் கிடைத்த செருப்பையும், மன்னரிடம் ஒப்படைத்தனர். அவை, அரண்மனைக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேவதை அளித்த வைர நகைகளும், தங்கம் பதித்த உடைகளும் சின்ரல்லாவுக்கு மீண்டும் கிடைத்தன. தோட்டத்தில், வண்ண விளக்குகள் மிளிர்ந்தன; அரண்மனை சுவர்களில், பவளம் பதிக்கப்பட்டிருந்தன. துாண்களில், வைரச் சரங்கள் தொங்கின.ரேணியாவும், ஜெசிந்தாவும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தனர்.பண்பின் சிகரமான சின்ரல்லா, 'என் சித்தியையும், தங்கையையும் மன்னித்து விடுங்கள் மன்னா; அறியாமல் செய்த தவறை பொருட்படுத்தாமல், விடுதலை செய்து, சிறப்பாக வாழ வழி செய்யுங்கள்...' என, கனிவுடன் வேண்டினாள்.மன்னரும் எச்சரித்து அவர்களை விடுதலை செய்தார். நாடே, சின்ரல்லாவைப் புகழ்ந்தது. ரேணியாவும், ஜெசிந்தாவும் வெட்கி தலைகுனிந்து, மன்னிப்புக் கேட்டனர்.ஒரு நல்ல நாளில், சின்ரல்லா - இளவரசர் திருமணம் சிறப்பாக நடந்தது; தேவதைகள் வந்து வாழ்த்தின. குழந்தைகளே... சின்ரல்லாவை போல் பொறுமையைக் கடைபிடித்தால் சிறப்பாக வாழலாம்.- முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !