அந்துமணி பதில்கள்!
எம்.ஜெயராமன், சென்னை: எதிர்சீட்டில் கால் வைக்கும் பயணிகளை திருத்துவது எப்படி?நகம் வெட்டாத, பித்த வெடிப்புடன் அழுக்கும், புழுதியும் நிறைந்த அந்தக் கால்கள்... ஓ... அருவருப்பு... சொல்லிப் பார்க்கலாம்; நம் காலை அவர் சீட்டில் வைக்கலாம்...(வம்பு) சிரமமான காரியம் தான்!சி.என்.ஜார்ஜ் ஸ்டீபன், மேட்டுப்பாளையம்: 'நஷ்டத்தில், ஊழலில் இயங்கும் அரசுத் துறை தொழில்களை தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும்...' என்று கூறுகின்றனர். ஆனால், அரசுத் துறை ஊழியர்களோ, பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவர்கள் தனியாரிடம் வேலை செய்தால், லஞ்சம், ஊழல் குறையவா போகிறது?'அடிப்பவர் அடித்தால், அம்மியும் நகரும்' என கேள்விப்பட்டு இருக்கிறீர்களா... அது போலத்தான். தனியாரிடம், 'ரெட் டேப்பிசம்' எனும் சிவப்பு நாடா முறை கிடையாது. முடிவெடுப்பதோ படு சுறுசுறுப்பு! லஞ்ச பேர்வழிகள் திருந்துவர், திருத்தப்படுவர் அல்லது வெளியேற்றப்படுவர். இந்த பயம் தனியார் துறையில் இருப்பதால் தானே எல்லாரும், 'அரசு வேலை, அரசு வேலை...' என, ஆலாய் பறக்கின்றனர்!என்.பரந்தாமன், பொள்ளாச்சி: திரைப்படங்களில், 'சட்டத்தை நானே கையில் எடுத்துக் கொண்டேன்...' என்கின்றனரே... அதுபோல், நான் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?வெள்ளை அரை டவுசர் அணிய வேண்டியது வரும்; மணி அடித்தபின், 'மாமியார் வீட்டு' சோறு தின்ன வேண்டி வரும்; நேரத்தை போக்க இரும்பு கதவின் கம்பிகளை, மீண்டும் மீண்டும் எண்ண வேண்டி வரும்!என்.நந்தகுமார், சீலையம்பட்டி: சாலை பராமரிப்பில் தமிழகம் படுமோசமாக இருக்கக் காரணம் என்ன?நாம் எவ்வளவோ மேல்... ஆந்திரா, ஒடிசா போய் பாருங்கள்!எஸ்.ஜமீலா பீபி, புதுச்சேரி: தற்கொலை செய்து கொள்பவர்கள் யார்?கோழைகள்; வாழ்வின் நிதர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுபவர்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கு ஒருவர், தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, 'நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ!'வி.ஆர்.பத்மா, திருவொற்றியூர்: விதண்டாவாதம் பேசுவோரை திருத்துவது எப்படி?நேரத்தையும், சக்தியையும் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்? இப்படிப்பட்ட ஆசாமிகளை திருத்த முடியாது; இவர்களைப் பார்த்தாலே, 'அம்பேல்' ஆகிவிடுங்கள்!எஸ்.இஸ்மாயில், கோம்பை: படிக்காதவர்கள் முன்னேறிய அளவிற்கு, படித்தவர்கள் தொழில் துறையில் முன்னேறவில்லையே... என்ன காரணம்?தொழில் துவங்குவது குறித்து, அரசு நிறுவன அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர், 'படித்தவர்கள் குறிப்பாக, தொழிற்கல்வி படித்தவர்களுக்கு கொடுத்த கடன், 90 சதவீதம் திரும்பி வருவது இல்லை. இதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்தோம். தொழில் நுட்பத்தில் அவர்களுக்கு இருக்கும் திறமை, வியாபாரம் செய்வதில் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். தொழிற்கல்வி படித்தவர்கள், சம்பள ஆட்களாக இருப்பதே சிறந்தது...' என்றார்.படிக்காதவர்களுக்கு தொழில் என்பது வாழ்வா, சாவா பிரச்னை. எனவே, தொழிலை தக்க வைத்து, துட்டும் சம்பாதித்து விடுகின்றனர். படித்தவர்களுக்கு, 'இந்த மடம் இல்லேன்னா சந்தை மடம்....' என்ற எண்ணம் மனதில் ஊன்றி இருப்பதால், துண்டை தோளில் உதறிப் போட்டு, சம்பள ஆட்களாக அடுத்தவர்களிடம் வேலை பார்க்க சென்று விடுவதே முன்னேறாமைக்கு காரணம்.டி.கண்ணன், கூடலூர்: மனிதர்களில் சிலர் பிறக்கும் போதே ஊனமுற்றவர்களாகப் பிறக்கின்றனரே... அது போல, விலங்குகள் ஊனமுள்ளவைகளாக பிறக்கின்றனவா? அந்த மாதிரியான விலங்குகளைப் பார்த்தாக ஞாபகம் இல்லையே... நீங்கள் பார்த்ததுண்டா?உண்டு; விலங்குகளும் உடல் ஊனமுற்று பிறப்பது சகஜம் தான்!