அந்துமணி பதில்கள்!
* வி. பத்மா, ஸ்ரீரங்கம்: ஆரம்ப காலம் முதல், 70 ஆண்டுகளாக, 'தினமலர்' எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் சார்பு கொள்ளாது, சுயேச்சை பத்திரிகையாக, தன் கொள்கை, லட்சியத்தோடு நின்று, இன்று வரை ஜெயித்துக் காட்டியது எப்படி?ஏன் சார்பு இல்லாது... வாசகர்கள் தான் அதன் சார்பு! வாசகர்களே, 'தினமலர்' இதழின் முதலாளிகள்; அவர்களுக்காகவே நடத்தப்படுவதால், ஜெயித்துக் கொண்டிருக்கிறது! ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை: 'ராஜிவ் கொலை வழக்கில், சிறையிலுள்ள, ஏழு பேர் மட்டும் தான் தமிழர்களா? சிறையில் உள்ள மற்ற கைதிகள் யாரும் தமிழர்கள் இல்லையா?' என, தமிழக காங்., தலைவர் அழகிரி முழக்கமிட்டுள்ளாரே?என்ன சொல்ல வருகிறார் என்பது, புரியவே இல்லையே! சிறையில் உள்ள அனைத்து தமிழர் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறாரோ... நல்ல தமாஷ் தான்!பி. ஜெயப்பிரகாஷ், கோவை: 'தி.மு.க.,வில் சாதாரண தொண்டனாக இருந்து, பொதுச்செயலர் பதவி அடைந்துள்ளேன்...' என்று, துரைமுருகன் பெருமிதப்பட்டுள்ளது குறித்து...இது என்ன பதவி... தலைவர் சொல்வதைத் தான், இவர் சொல்ல வேண்டும்... தனிப்பட்ட முறையில் இவர் முடிவு எதுவும் எடுக்க முடியாதே!* தீ. அசோகன், சென்னை: பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், தமிழக தேர்தல் எப்படி இருக்கும்?எந்தக் கட்சியிலுமே, பெரிய தலைவர்கள் இல்லையே; தடுமாற்றம் தான்! ஒருவேளை, ரஜினி அரசியலுக்கு வந்தால், அவர் கட்சிக்கும், அவருடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது!எ. ராஜேந்திரன், கோவை: யாருக்காவது, நீங்கள் கடனாகக் கொடுத்த பணம் திருப்பி கிடைத்திருக்கிறதா?வாங்குவதில்லை; கொடுப்பதும் இல்லை என்பதே, என் கொள்கை! உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?* பி. பாஸ்கரன், மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியாவது, மதுவிலக்கை தன்னுடைய தேர்தல் அறிக்கையாகக் கொடுக்குமா?'லெட்டர் பேடு' கட்சியாக தொடர விரும்பும் கட்சி தான், இப்படி ஒரு அறிக்கையைக் கொடுக்கும். ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிகள் எதுவும், இதுபோன்ற தேர்தல் அறிக்கையைக் கொடுக்காது!ரா.சா. சந்திரசேகர், சென்னை: சசிகலா மீது, தமிழக மக்களிடம் அனுதாப அலைக்கு வாய்ப்பிருக்கிறதா?ஊழல் வழக்கில், சிறை சென்றவர் மீது, எப்படி அனுதாபம் பிறக்கும்? தமிழக வாக்காளர்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல!