உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

காலம் தப்பிய மழை; காவிரியில் தண்ணீர் இல்லை; ஏரி, குளங்கள் வற்றி விட்டன... 'என்னடா சோதனை இது?' என எண்ணும் வேளையில், பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்... 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று! ஹிஸ்ட்டிரி ரிபீட்ஸ் - வரலாறு திரும்பும் என்கிற கோட்பாடு உண்மையானது... இன்று, பூமியின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளின் துளைகள்! நிலத்தடி நீர் மட்டம் கானல் நீரானது! தாறுமாறான தட்பவெப்ப நிலை. பருவ மழை பொய்த்தது; கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு; விளைச்சல் இல்லை...தென்னை மரங்கள் சரசரவென சாய்கின்றன; குடிநீருக்கு விலை; கால்நடைத் தீவனத்திற்குத் தட்டுப்பாடு; அணைகள் வறண்டன; மின் பற்றாக்குறை... இப்படி சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளால், தமிழகம் எங்கும் சோகம் காண்கிறோம்.பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது என்பது வரலாறு; இது நிகழ்ந்தது சங்க காலத்தில்!ஒரு கொடிய பஞ்சம் 1876 - 78களில் ஏற்பட்டது. இதை, 'தாது - ஈசு வருடப் பஞ்சம்!' என்று வரலாறு குறிப்பிடுகிறது. இப்பஞ்சத்தின் போது, மக்கள் பட்டினியால் வாடினர்; பட்டினிச் சாவுகளும் நிகழ்ந்தன. உண்ண உணவின்றி இலை, தழைகள், வேர் கிழங்குகளை உண்டு, மக்கள் பசியைப் போக்கினர். நோய் நொடிகளுக்கு இலக்காகி, மடிந்தனர். நீதிபதி வேதநாயகம் பிள்ளை போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்கள், கஞ்சித் தொட்டிகள் தொடங்கி, மக்கள் பசிப் பிணியை அகற்றினர்.இரண்டாவதாக, 1939 - 40களில், 'கல் தட்டிப் பஞ்சம்' ஏற்பட்டது. இது, 'வெகு தான்ய வருடப் பஞ்சம்' என்று சொல்லப்பட்டது. ஆடு, மாடுகளுக்குத் தீனி இல்லை. ரோடு போட, ஓடக்கல்லைத் தட்டி கூலி பெற்றனர் மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். மியான்மர் (பர்மா) குருணை அரிசி பெற்று, மக்கள் பசி தீர்த்துக் கொண்டனர். அப்போதும் கஞ்சித் தொட்டி தொடங்கி உணவளித்ததை நான் நேரில் கண்டுள்ளேன்.மூன்றாவதாக, 2001 - 2002ல் பஞ்சம் ஏற்பட்டது. சித்ரபானு ஆண்டில் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், கால்நடைகளுக்குத் தீனி இல்லாத நிலைமை, தென்னை மரங்கள் சாய்ந்தன; சாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக, தற்போது சோற்றுப் பஞ்சமில்லை.இம்மூன்று பஞ்சங்களுக்கிடையே ஒரு பொதுவான தொடர்புள்ளதைப் பார்க்கலாம். அதாவது, ஒரு பஞ்சத்திற்கும் அடுத்த பஞ்சத்திற்கும் உள்ள இடைவெளி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள். 1876க்கும் 1939க்கு மிடையே, 63 ஆண்டுகள், 1939க்கும் 2002க்கு மிடையே, 63 ஆண்டுகள். எனவே, 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியில் மாற்றம் நிகழும் என்பது புலனாகிறது.வரலாற்றில் மாதம் மும்மாரி பொழிந்த காலமுண்டு; அது வெறும் கற்பனை அன்று. முன்பு இயற்கைச் சூழலில் சமச்சீர் நிலவியது. தற்போதைய நிலைமையே வேறு... மனிதனின் பேராசையும், விவேகமின்மையும் இயற்கை வளங்களை தீர்ப்பதன் மூலம், இயற்கைச் சமச்சீர் தொலைந்து விட்டது; தொலைக்கப்பட்டு விட்டது. எனவே, தாறுமாறான தட்ப வெப்ப நிலையும் சுற்றுச் சூழலில் சீர்கேடுகளும் நிலவுவதைக் காண்கிறோம். ஆகையால், மாதம் மும்மாரி பெய்த காலம் மலை ஏறி விட்டது. இயற்கையின் சமநிலை கெடுவதற்குக் காரணங்களாக, வானிலை ஆய்வாளர்கள் கூறுவது, ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பொத்தல், எல்னினோ, வானினா, குளோபல் வார்மிங் போன்ற அசாதாரண நிகழ்ச்சிகளாகும். இந்நிலை தொடர்ந்தால், ஒரு கால கட்டத்தில், இயற்கையான சுற்றுச் சூழல் மனித வாழ்க்கைக்குச் சாதகமாக இருப்பதற்கு பதிலாக, பாதகமாக அமையும்.மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால், காற்று, நீர், மண் மூன்றும் மாசுபட்டு விட்டன. இதுவரை இலவசமாகக் கிடைத்து வரும் தூய காற்றும், எதிர்காலத்தில் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்; உருவாகிக் கொண்டிருக்கிறது.தற்போதைய மானிட சமுதாயம் எதிர்கால சந்ததியினரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் காலத்தில் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிறது. இயற்கையில் பயனுள்ள பலவற்றிலும் மழை மிகச் சிறந்தது. எனவே தான், அய்யன் வள்ளுவப் பெருந்தகை, தன் திருக்குறளில், வான் சிறப்பை கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார்.மழை இல்லையானால் மண்வளம் சுருங்கும், மக்கள் மன வளமும் சுருங்கும், தானமிருக்காது; தவமிருக்காது. தற்போது அந்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.நாகரிகத்தின் உச்சகட்டத்தை தொட்டுள்ள மனித சமுதாயம், சென்ற நூற்றாண்டுகளில் பல்வேறு மாறுதல்களைக் கண்டுள்ளது; இப்போதும் கண்டு கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் காணப் போகிறது. சுற்றுச் சூழலும், உயிரினமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒட்டி உறவாடுகின்றன. இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் செயல்படுகின்றன. எனவே, சுற்றுச் சூழலுக்கும், உயிரினத்திற்குமிடையே எப்போதும் சமநிலை நிலவு கிறது. இந்த சமநிலை பாதிப்படைந்தால், பல்வேறு விளைவுகள் இயற்கையில் நிகழும்; மனித வாழ்வே ஆபத்திற்கு உள்ளாகும்.இயற்கைச் சூழலுக்கும், மனித சமுதாயத்திற்குமிடையே ஓயாத பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில், இயற்கை தான் வெல்லும் என்பது நியதி. இயற்கையுடன் நமக்குள்ள தாய் - சேய் உறவைக் காப்பாற்ற வேண்டும். சங்க கால இலக்கியமான அக நானூற்றுப் பாடல் ஒன்று இயற்கைச் சூழலைச் சிதைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது...— இவ்வாறு கூறுகிறார் பேராசிரியர். எப்படி தாக்குப் பிடிக்க போகிறோமோ!***எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர்... வயது 60ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறார்! தம் 30வது வயதிலிருந்து பலவித தொழில் - வியாபாரம் செய்து பார்த்து விட்டார்... ஒன்றிலுமே வெற்றி கிட்டவில்லை. அவரது குடும்பத் தொழில் ஒன்று உண்டு... அது மட்டும் பெரியவர்கள் போட்ட அஸ்திவாரத்தால் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கும் சமீபத்தில் போட்டி ஏற்பட்டது. போட்டியைச் சமாளிக்க அதிரடி மாற்றங்களைச் செய்தார். அதனால், ஈயம் போன பித்தளையாக, ரசம் போன கண்ணாடியாக இப்போது காட்சி அளிக்கிறது அத்தொழில்.இவர் ஏன் இப்படி இருக்கிறார் என நான் ஆழ்ந்து சிந்திப்பது உண்டு; இதற்கு விடை சொல்வது போல புத்தகம் ஒன்று கிடைத்தது.புத்தகத்தின் பெயர்: 'நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி?' எழுதியவர்: பி.சி.கணேசன்.அதில் — எவ்வளவு பலவீனமான கருத்தாக இருந்தாலும், ஒவ்வொருவனும் தன்னுடைய கருத்தை உயர்ந்தது என்றும், வலிமையானது என்றும் நினைக்கிறான். அந்த மயக்கத்திலிருந்து சுலபத்தில் நீங்கள் அவனைத் தெளிய வைக்க முடியாது.அவனுடைய கருத்து தவறானது என்றாலும், அதை, அவன் உணர்ந்து திருத்திக் கொள்வான் என்று எதிர்பார்க்க வேண்டாம். தவறு என்று தெரிந்தாலும், அதை ஒப்புக்கொள்வதை பலவீனம் என்று கருதுவான்; கவுரவக்குறைவு என்று கருதுவான்.'தான்' என்ற எண்ணத்தை இவர்களைப் போன்றவர்களால் அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியாது.ஆகவே, உரையாடலின் போது ஒருவன், தான் என்பதை மறந்து பேச வேண்டும் என்று ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். எந்த மனிதனும் தோல்வியடைய விரும்புவதில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிற மனப்பக்குவம், ஒரு சிலருக்கே இருக்கும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !