அந்துமணி பா.கே.ப.,
அந்துமணி வாசகியான மாணவி ஒருவர் நீண்ட கடிதத்துடன், தம் கல்லுாரி நுாலகத்தில் படித்த, 'எஜுகேஷன் வேர்ல்ட்' என்ற மாத இதழில் வெளியான கட்டுரை ஒன்றின் போட்டோ காப்பியையும் அனுப்பி வைத்திருந்தார்.'கடிதத்தில், 'இன்டியாஸ் ஒர்ஸ்ட் கெப்ட் சீக்ரெட்' என்ற கட்டுரையை இணைத்துள்ளேன். இக்கட்டுரை, என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இதைப் படித்துப் பார்த்து ஒரு பக்கமாவது எழுதுங்கள். அதன் மூலம், நம் நாட்டில் நடந்து வரும் கொடுமை வெளியே வரும்; மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்...' என, எழுதி இருந்தார்.கட்டுரையைப் படித்து, உதவி ஆசிரியர் விளக்கியபோது, நெஞ்சு கனத்தது. பிஞ்சுகளிடம் இப்படியெல்லாமா... அதுவும், 'குழந்தையும், தெய்வமும் ஒன்று' என, சொல்லும் நம் இந்தியாவிலா இப்படியெல்லாம் நடக்கிறது என்று கொதிக்க வைத்தது.எதற்கெடுத்தாலும், 'வெளிநாடு... வெளிநாடு...' என்று சொல்கிறோமே... அது தந்த, 'சீர் கெட்ட இறக்குமதிகளில்' இதுவும் ஒன்று என, எண்ணத் தோன்றியது.கட்டுரையில் இருந்த சமாசாரம் இதுதான்...சிறு வயதில் படுசுட்டிப் பாப்பா ஷாலினி; இப்போது வயது, 14; மும்பையில் உள்ள பிரபல மனோதத்துவ டாக்டரிடம் அழைத்து வரப்பட்டிருந்தாள். கவலை தோய்ந்த முகத்துடன் பெற்றோர் இருபுறமும் அமர்ந்திருக்க, டாக்டரும் எவ்வளவோ வளைத்து வளைத்து கேட்டுப்பார்த்தும், எதற்கும் பதில் கொடுக்கவில்லை, ஷாலினி.கடைசி வரை மருண்டு பார்த்தபடி மழுப்பி விட்டாள். கடைசியில், 'சரி, ஷாலினி... உனக்கு மனசுல தோணுவதை ஒரு பேப்பரில் எழுதி என்னிடம் கொடுத்து விடு; சரியா...' என்று சொல்லி அனுப்பி விட்டார் டாக்டர்.சொன்னது மாதிரியே, அடுத்த முறை வரும் போது, ஒரு பேப்பரில் எழுதி வந்தாள். டாக்டர் எதிர்பார்த்த மாதிரியே அதில் எழுதி இருந்தாள் ஷாலினி.ஷாலினிக்கு, 13 வயது இருந்தபோது, அடிக்கடி மாமா வீட்டுக்கு அனுப்புவர் பெற்றோர். மாமாவுக்கு வயது, 50; அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு துணையாக தினமும் அங்கேயே தங்கி, பணிவிடை செய்ய வேண்டும்.ஆரம்பத்தில், இரவில் நன்றாக துாங்கி விட்டதால், ஷாலினிக்கு ஒன்றும் தெரியவில்லை. போகப் போக மாமாவின் தவறான செய்கை தெரிந்தது. தினமும், நடுராத்திரியில் அருகே உட்கார்ந்து, தன் உடலில் பல இடங்களிலும் மாமா தடவியபடி இருந்ததை அறிந்து, பாதி துாக்க மயக்கத்திலேயே இருந்தாள்.போகப் போக உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட, மாமா செய்ததெல்லாம் பிடித்திருந்தது. ஆனாலும், இது தவறு என்று நினைக்கத் தெரியாமல் இருந்தாலும், அதை, வெளியில் சொல்லக் கூடாது என்று மட்டும் தெரிந்தது ஷாலினிக்கு!மாமாவின் இந்த தவறான செயல், பல இரவுகள் தொடர்ந்தது. சில சமயம், 'என்னடா துாங்குடா... மாமாவுக்கு இது தாண்டா ஆறுதல்.ஒண்ணும் இல்லே; கவலைப்படாதே, நான் இருக்கேனுல்ல; நல்லா இருக்கா...' என்றெல்லாம் பேசி, செய்த சில செயல்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை; செய்யக் கூடாதவை என்பது பின்னாளில் தான் தெரிந்தது.இதை, அம்மாவிடம் சொல்லலாம் என்றால், மாமா பற்றி சொன்னால் நம்ப மாட்டார் என்பதால் மூடி மறைத்து விட்டாள் ஷாலினி.அப்பாவிடம் சொன்னால் அடிப்பார் என்று, புரியாத பயம். இப்படியே மாதங்கள் கழிந்தாலும், பயம், பீதி, தவறு செய்கிறார் மாமா என்ற குற்ற உணர்வு மட்டும் தலை துாக்கியது.விளைவு என்ன தெரியுமா... சரியாக படிப்பதில்லை, யாரிடமும் பேசுவதில்லை. மாமா வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொன்னால், 'வராவிட்டால் சொல்லி விடுவேன்...' என்று மாமாவின் மிரட்டல்... இவ்வளவையும் தன் கடிதத்தில் கொட்டித் தீர்த்திருந்தாள், ஷாலினி.கடிதம் படித்து, அதிர்ந்து போகவில்லை, டாக்டர். சரியான சிகிச்சையை ஆரம்பித்தார். பெற்றோரை கூப்பிட்டு அவர்கள் தவறை சுட்டிக் காட்டினார்.இப்படி பல குழந்தைகள், 'செக்ஸ்' கொடுமைக்கு ஆளாவது, இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பது தான் மருத்துவ ஆய்வின் முடிவு.சில ஆண்டுகளுக்கு முன், மகாபலிபுரத்தில், 48 வயது ஹாலந்து நாட்டு ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் விட்டனர். இப்போது, அவர் மீதான வழக்கு என்னவாயிற்று என்றே தெரியாத நிலை.அவர், அனாதை விடுதி நடத்தி வந்தார். அங்கு ஏழை, ஆதரவற்ற குழந்தைகளை, அதுவும் பிறந்த குழந்தையாக இருந்தாலும் சேர்த்து விடலாம் என்று அறிவித்து, வளர்த்து வந்தார்.வெளிநாட்டில் பணம் வாங்கி, தமிழகத்து ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் நல்வாழ்வுக்கு இதை நடத்தி வருகிறார் என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், போலீசில் மாட்டும் போது தான் அவரின் வேஷம் கலைந்தது.அவர் நடத்தியது ஆதரவற்றோர் விடுதி என்றாலும், அங்கு நடந்ததெல்லாம் குழந்தைகள், 'செக்ஸ்' தொழில். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை நிர்வாணமாகப் படமெடுத்து, இன்டர்நெட்டில் போட்டு வெளிநாடுகளில், 'செக்ஸ்' பிரசாரம் செய்துள்ளார்; குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார்.இது ஆரம்பத்திலேயே தெரியாத அளவுக்கு, போலீஸ் உட்பட, பல அரசு துறையும் லஞ்சத்துக்கு விலை போய் விட்டது தான் வேதனையான உண்மை.ஆங்காங்கு இப்படி நடக்கும் சம்பவங்களை சேகரித்து, சில ஆராய்ச்சி அமைப்புகள் ஆய்வு செய்ததில், பல பயங்கர உண்மைகள் தெரிய வந்தன. குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் இந்த கொடூரத்துக்கு பெயர், சி.எஸ்.ஏ., அதாவது, 'சைல்டு செக்சுவல் அப்யூஸ்!'அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இது புற்றீசல் போல பரவி விட்டதுடன், வெப்சைட் கலாசாரமாக மாறி விட்டது. இப்போது இந்த பயங்கரம் இந்தியாவில் பரவ ஆரம்பித்துள்ளது. படித்தவர்கள் மத்தியிலும், படிக்காதவர்களிடமும் இது பரப்பப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளிடமும், 'செக்ஸ்' அத்துமீறல் நடந்து வருகிறது.இது பற்றிய பயங்கர புள்ளி விபரம் இதோ:* இந்தியாவில், 50 சதவீதம் குடும்பங்களுக்கு மேல் ஏழைகளாக உள்ளனர். கூட்டுக் குடும்பமாக, குடிசைகளில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழ்கின்றனர். போலீசார் அத்துமீறல், சரியான வருமானமின்மை, கணவன் நடத்தை, உறவினர் போக்கு என்ற பல காரணங்களால் இந்த, சி.எஸ்.ஏ., ஏற்படுகிறது* அனாதை விடுதிகள் என்ற பெயரில் குழந்தைகளிடம், பாலியல் கொடுமை நடக்கிறது. தமக்கு நடப்பது என்னவென்பதே தெரியாமல் தவறான செயலுக்கு உட்படுத்தப்படுகின்றனர், குழந்தைகள்* இப்படி ஏதாவது ஒரு வகையில், பத்தில் ஒரு குழந்தை இந்தியாவில் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு உறவினராலும், சிலருக்கு வெளியாட்களாலும், சிலருக்கு ஆதரவற்றோர் விடுதிகளிலும் இந்தக் கொடுமை நடக்கிறது என்கிறது, ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.,)* இந்தியாவில் மட்டும், 20 லட்சம் குழந்தைகள் இப்படி, சி.எஸ்.ஏ., கொடுமைக்கு ஆளாகின்றனர்* டில்லியை சேர்ந்த ஒரு சர்வதேச சமூக அமைப்பான, 'ராகி' மேற்கொண்ட ஆய்வில், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா மற்றும் கோவாவில் ஆங்கிலம் பேசும், 600 குழந்தைகளிடம் சர்வே எடுத்ததில், அவர்களில், 67 சதவீதம் பேர், ஏதாவது ஒரு கட்டத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிந்தது.குழந்தைகளுக்கு ஏற்படும், 'செக்ஸ்' கொடுமைகளை வரையறுத்து, சட்டமாக்கி கடும் தண்டனை தருகின்றனர் வெளிநாடுகளில்; இந்தியாவில் அப்படி ஒரு விரிவான சட்டம் இல்லை. இப்போதுள்ள சட்டத்தில், 'குழந்தை செக்ஸ் அத்துமீறல் கொடுமைகள்' சேர்க்கப்படாததால் தான் அவர்கள், 14 வயதை தாண்டியவுடன் மனோரீதியான அழுத்தம், பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.ஆணோ - பெண்ணோ, தன் உறவினர், நண்பர் மற்றும் வெளியாட்கள், பெண் குழந்தையிடம் தன் உறுப்பை காண்பிப்பது, தொடுவது, தொடச் செய்வது, பாலியல் தவறு செய்வது, செய்ய வைப்பது, உடல்ரீதியான இப்படிப்பட்ட தவறுகளை நியாயப்படுத்துவது, மனநிலையை மாற்றி தவறான செய்கைகளுக்கு துாண்டுவது இதெல்லாம் தான், சி.எஸ்.ஏ., கொடுமை.இதெல்லாம் நம் சட்டத்தில் இல்லை. மானபங்க முயற்சி தான் முதல் கட்ட புகாராக பதிவு செய்யப்படுகிறது; இதுவே தவறு. அதற்கு முன், பல கட்டங்களில் அந்த சிறுமியிடம் தவறான செய்கைகளை துாண்டியிருக்கலாம், செய்திருக்கலாம், மனதை பாதிக்க வைத்திருக்கலாம். இதையெல்லாம் போலீசோ, சட்டமோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.கடுமையான சட்டம் கொண்டு வர இப்போது தான் சிந்தித்து வருகின்றனர். அதற்கு முன், குழந்தைகளுக்கு எதையும் மறைக்காமல், நல்லது, கெட்டதை அவ்வப்போது பெற்றோர் தாம் சொல்லித் தர வேண்டும்; மறைத்தால் தான் தவறு.இதோ சில டிப்ஸ்களை சொல்கிறது, உலக சுகாதார அமைப்பு:* எந்த உறுப்பும் மர்மமானதோ, ரகசியமானதோ இல்லை; ஆனால், அந்தந்த காலகட்டத்துக்கு, ஏற்ப அதைப்பற்றி சொல்லி, உஷார் படுத்துவது நல்லது* யாராவது, 'உம்மா' கொடுத்தால், குழந்தையை விட்டே தடுப்பது நல்லது* பெண் குழந்தைகளின் மார்பகம் உட்பட மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளை, யாரும் தொட விடாமல் பார்த்துக் கொள்ள குழந்தைகளுக்கு தாய் சொல்லி தர வேண்டும்* குழந்தை அடிக்கடி வெளியில் போகிறாள் என்றால் கண்காணிக்க வேண்டும்* 'டிவி'யில் பார்த்தும் தவறான நடத்தைக்கு உட்படலாம்; அதனால், அது சரி, இது தவறு என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரிப்பதுடன், கண்காணிப்பது முக்கியம்* வெளியாட்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்ல வேண்டும்* எந்த கட்டத்திலும் தவறு என்று தெரிந்தால், உடனே போன் செய்யவோ, வெளியேறவோ அட்வைஸ் செய்து வைக்க வேண்டும்.- இனியாவது உஷாராக இருங்கள்... 'மாமா தானே... சித்தப்பா, பெரியப்பா தானே..' என்று அசட்டையாக இல்லாமல் விழிப்புடன் இருங்கள்!