உள்ளூர் செய்திகள்

கோடை நோய்களை தவிர்க்க...

கோடை காலம் துவங்கும் முன்னரே, வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. வரும், மே அக்னி நட்சத்திரம் இன்னும் கொடுமையாக இருக்கப் போவது உறுதி. ஒவ்வொரு பருவநிலைக்கும் அதற்குரிய நோய்கள் நம்மை தாக்குவது வழக்கம். அதேபோன்று, வெயிலுக்கே உரிய நோய்களான வியர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச்சல் என, பலவும் நம்மை தாக்க காத்திருக்கின்றன. இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள...சளி மற்றும் காய்ச்சல்:மற்ற பருவ காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலிலிருந்து மாறுபட்டது, கோடை கால காய்ச்சல்; இதை உருவாக்கும் வைரஸ்கள், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் மூலமாகவும், பகலில் அதிக வெப்பம், மாலையில் அதிக குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றத்தாலும், இவை, உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.சரும பிரச்னை:இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தங்கி, படர் தாமரை, அரிப்பு மற்றும் தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக துாசு, வெப்பக் காற்று காரணமாகவும், சருமத்தில் அலர்ஜி ஏற்படும். உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொடாமல் இருப்பது, முடிந்த வரை உடலை துாய்மையாக வைத்திருப்பது, படர் தாமரைக்கான கிரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு பூசுவது ஆகியவற்றை மேற்கொண்டாலே பிரச்னை தீரும்.வியர்குரு மற்றும் வேனல் கட்டி:உடம்பின் வெப்பநிலை அதிகரிப்பதால், உடலிலுள்ள நீர்ச்சத்து விரைவாக குறைந்து, வற்றி விடும். இதனால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, உடம்பில் வேனல் கட்டிகளையும், முகத்தில் பருக்களையும் ஏற்படுத்தும். இவை, அதிக வலி தருவதாக இருக்கும். சிறிய கட்டிகளாக இருந்தால், இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும்; சீழ் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த கட்டிகளை கையால் தொடவோ, கிள்ளவோ கூடாது. இதன் சீழ் படும் இடங்களில் எல்லாம் கட்டிகள் தோன்றும்.உடம்பில் வியர்வை தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது; இதைத் தடுக்க, முகத்தை தண்ணீரால் கழுவுவது, உடம்பை ஈரத் துணியால் துடைப்பது, தினமும் இரண்டு முறை குளிப்பது, வெளியில் செல்லும்போது, வியர்க்குரு பவுடர் போட்டுச் செல்வது என்று பராமரிப்பதன் மூலம், வியர்க்குருவிலிருந்து தப்பிக்கலாம். வியர்க்குரு வந்தால், சொறியக்கூடாது. இரண்டு வேளையும் குளித்து, குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், அரிக்கும் இடங்களில் பவுடர் போட்டாலே போதும்; வியர்க்குரு மறைந்து விடும். சின்னம்மை:கோடையில் சில நோய்க் கிருமிகள் அதிக ஆற்றலுடன் செயல்படும். அவற்றில் முதன்மையானது, 'சிக்கன் பாக்ஸ்' எனப்படும் சின்னம்மை. இதை உருவாக்கும் கிருமி, நம் உடலில் விரைவாக தொற்றும்; கோடையில் இன்னும் வீரியமாக செயலாற்றும். வெளி வேலை செய்வோர், இரு சக்கர வாகனத்தில் அலைவோருக்கு எளிதில் தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து துாசு மற்றும் புகை மண்டலம் வழியாக, மற்றவர்களுக்கு எளிதாக பரவும். உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலும் சின்னம்மை ஏற்படும்.இதற்கான அறிகுறிகள்: அதிக ஜுரம், பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்களில் சிறு சிறு கொப்புளங்கள் வந்து, ஒரு வாரத்தில் மறைந்து விடும். கொப்புளங்களை கிள்ளக் கூடாது. வேப்பிலையை விரித்து, அதன் மீது படுப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிப்பது, வேப்பங் கொழுந்தை அரைத்து குடிப்பது போன்றவற்றை கடைப்பிடித்தால், கொப்புளங்களால் ஏற்படும் அரிப்பு நீங்கும். அதிக அரிப்போ, காய்ச்சலோ இருந்தால், மருத்துவரிடம் செல்லவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !