உள்ளூர் செய்திகள்

உடம்பைத் தொடாத மருத்துவம்!

யாரிடம் என்ன திறமை இருக்கிறது, யாரிடம் என்ன சக்தி இருக்கிறது என்பது, யாருக்கும் தெரியாது; ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமையைக் கொடுத்து வைத்திருக்கிறது, தெய்வம்.உருவம், சாதுரியம், பேச்சுத்திறமை, படிப்பு, பதவி, பணம், செல்வ வசதிகள்முதலானவைகளை வைத்தே, சக்தியையும், திறமையையும் மதிப்பிடுகிறோம். ஆனால், இவைகளுக்கும் திறமை, சக்தி ஆகியவைகளுக்கும் எந்தத்தொடர்பும் கிடையாது.இதை விளக்கும் ஒரு தெய்வீக - வரலாற்று நிகழ்வு...கரிகால் சோழ மன்னரின் மகளுக்கு வலிப்பு நோய் உண்டானது. ராஜவைத்தியம் பார்த்தும் மகளின் வலிப்பு நோய் நீங்கவில்லை. மன்னரின் மன வருத்தம் அதிகமானது. 'மன்னா... கொங்கு நாட்டில் குயவர் ஒருவர் இருக்கிறார். அவர் இந்நோயை சுலபமாகத் தீர்த்து விடுவார்...' என்று, மன்னரிடம் சிலர் கூறினர். 'சரி... அந்தக் குயவரை வரவழையுங்கள்...' என்றார், மன்னர். அதன்படியே குயவரும் வரவழைக்கப்பட்டார். 'அப்பா... நீ, சூடு போட்டு, வலிப்பு நோயைப் போக்குவாய் என, கேள்விப்பட்டேன். ஆனால், இளமையான என் மகளால், நீ போடும் சூட்டைப் பொறுக்க முடியாதே...' என்று வருந்தினார், மன்னர்.'மன்னா... கவலைப்படாதீர்கள், இளவரசியின் மீது படாமல் சூடு போட்டு, அவரின் நோயை நீக்குகிறேன்...' என்றார், குயவர்.அதைக்கேட்டு மன்னர் மட்டுமல்ல, சுற்றி இருந்தவர்களும் திகைத்தனர்.அவர்களின் சந்தேகத்திற்கு ஆளான குயவரோ, எதைப்பற்றியும் லட்சியம் செய்யாமல், முறைப்படி தெய்வ வழிபாட்டை முடித்து, தன் செயல்களில் ஈடுபடத் துவங்கினார். இளவரசியைப் போலவே மண்ணால் ஒரு பதுமையை -செய்த குயவர், இளவரசிக்கு உடலில் வலிப்பு நோய் எந்த இடத்தில் உள்ளதோ, பொம்மையில் அதே இடத்தில் சூடு போட்டு மருத்துவம் செய்தார். அதே விநாடியில், இளவரசியின் வலிப்புநோய், முற்றிலுமாக நீங்கியது.மகிழ்ந்தாள், இளவரசி; அரசரும், மற்றவர்களும் வியந்தனர். 'என் கடமையை நான் செய்து விட்டேன்...' என்று, புறப்படத் தயாரானார், குயவர்.கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்க்க, தழுதழுத்த குரலில், குயவரை மனதார வாழ்த்தி, ஏராளமான வெகுமதிகளைத் தந்து வழியனுப்பினார், மன்னர்.நடந்த வரலாறு இது. அந்தக் குயவரைப்போல மகாமேதாவிகள் வாழ்ந்த பூமி, இது. இன்றும் ஏராளமான துாய்மை பணியாளர்கள், காவலர்கள், செவிலியர்கள் என, பலரும் நமக்காக, நம்மைத் தொடாமலே பணிபுரிந்து வருகின்றனர்.நமக்காகப் பணிபுரியும் அவர்களை மதிப்போம். முகக்கவசம் அணிவோம். சமூக இடை வெளியைக் கடைப்பிடிப்போம். மறுபடியும் பரவி, ஒட்ட வரும் நோய் ஓடிப்போய் விடும்.பி.என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !