விவசாயியான, ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் இன்ஜினியர்!
சிறு வயதிலேயே, செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் மாதவன்.இதனாலேயே, 'விவசாயம் செய்யப் போகிறேன்...' என்று சொன்ன மாதவனுக்கு வீட்டில் எதிர்ப்பு.'ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு...' என்ற பெற்றோரின் கட்டளையை மீற முடியாமல், ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்து முடித்தார். கையோடு, மத்திய அரசு நிறுவனத்தில் உயர் பதவி, லகரங்களில் சம்பளம்.ஆனால், இது எதுவுமே மாதவனின் மனதை ஈர்க்கவில்லை. மனம் முழுவதும் விவசாயத்திலேயே இருந்தது. சில ஏக்கர் நிலம் வாங்கி, அதில், நவீன முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.நிலம் வாங்குவதற்கான தொகை தேறும் வரை வேலை பார்த்தவர், பணம் தேறியதும், வேலையை உதறி, செங்கல்பட்டு மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சாலவேடு கிராமத்தில் நிலம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு முன், விவசாயத்தை துவக்கினார்.ஆரம்பத்தில் எதுவும் பிடிபடவில்லை; நிறைய நஷ்டம். சரியான விளைச்சலும் இல்லை. ஆனாலும், மனம் தளராத மாதவன், இந்தியா முழுவதும் உள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டார். தண்ணீரே இல்லாமல் இஸ்ரேல் நாட்டினர் எப்படி விவசாயம் செய்கின்றனர் என்பதை அறிய, இஸ்ரேல் நாட்டிற்கும் சென்று வந்தார்.மூன்று சதவீதமே விவசாயம் செய்யும் அமெரிக்கா, 65 சதவீதம் விவசாயம் செய்யும் இந்தியாவிற்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி என்ற உண்மைகளை தேடிப் பிடித்தார்.விளைவு, இன்று, மற்றவர்கள் நிலத்தில் ஒரு டன் சோளம் விளைந்தால், இவரது நிலத்தில் ஆறு டன் சோளம் விளைகிறது. அதுவும், அபார தரத்துடன்!கடும் உழைப்பு, சோதனை முயற்சிகளின் காரணமாக, இவர் இந்த வெற்றியை பெற்றிருந்தாலும், இதை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல், பயிற்சி முகாம் நடத்தி விருப்பமுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.'எந்த ஒரு உத்தியோகத்தையும் விட விவசாயம் தாழ்ந்தது அல்ல என்பது நிரூபணமாக வேண்டும். இளைஞர்கள் கார்ப்பரேட் வேலையைவிட்டு, விவசாயத்திற்கு வர வேண்டும். என் தாய்நாடு விவசாய உற்பத்தியில் மிகுமின் நாடாக மாறி, பல்வேறு நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை, லட்சியம்...' என்று உணர்வுப் பூர்வமாக கூறுகிறார்.இவரது விளை பொருட்களை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, இவரைப்பற்றி கேள்விப்பட்டு இவரது நிலத்திற்கு வந்து பார்வையிட்டவர், 'இப்போது, நம் நாட்டிற்கு நிறைய மாதவன்கள் தான் தேவை...' என்று கூறியுள்ளார்.'உலகிலேயே விவசாயம் செய்ய ஏற்ற நாடு, இந்தியா தான். ஆனால், இங்கே விவசாயிக்கு மதிப்பு இல்லை; ஒரு விவசாயி, தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளவே தயங்குகிறார். ஏற்கனவே, நம் நாட்டில் பிறக்கும், 100 குழந்தைகளில், 48 குழந்தைகள் போதிய சத்துணவு இல்லாமல் சாகின்றனர். விவசாயம் வீழ்ச்சியடைந்தால், விரைவிலேயே நாமும் உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.'என் நிலத்திற்கு வாருங்கள்; காற்றின் ஈரப்பதத்தை பயன்படுத்தி எப்படி பயிர் செய்கிறேன் என்று பாருங்கள். ஆண்டிற்கு மூன்று பருவத்திற்கு ஏற்ப, பயிரிடும் முறையை கற்றுக் கொள்ளுங்கள். அதிக தண்ணீர், அதிக ஆபத்து எனும் தண்ணீர் மேலாண்மையை புரிந்து கொள்ளுங்கள். தொழிற்கருவிகள் துணையோடு விவசாயத்தை நவீனமாக்குங்கள். வீட்டையும், நாட்டையும் உயர்த்தி, உங்களையும் உயர்த்திக் கொள்ள விவசாயம் ஒரு அருமையான வழி...' என்று கூறும் மாதவனுடன், madhur80@hotmail.com என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.- எல். எம். ராஜ்