சுப நிகழ்ச்சிக்கு கருடசேவை!
வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்த இருந்தால், குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வத்துக்கு பட்டு சாத்துதல் என, வழிபாடு செய்வோம். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகிலுள்ள, கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாஜலபதி கோவிலில், இதற்காக, கருட சேவை வழிபாடு நடத்துகின்றனர். சுப நிகழ்ச்சி காலத்தில், அனைவர் பார்வையும், நம் வீட்டில் தான் இருக்கும். கருட பார்வை, திருஷ்டி தோஷத்தை நீக்கும். இதன் அடிப்படையிலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், தம்பதிகளுக்கு பாதுகாப்பு தரும் வகையிலும் இந்த வழிபாடு அமைகிறது. ஆண்டுக்கு, 60 நாட்களுக்கு மேலாக கருட சேவை நடப்பது, இங்கு விசேஷம்.இந்த கோவிலில் முக்கிய அம்சம், மூலவர். வெங்கடாஜலபதி கோவில்களில், அவர் தான் தாயார்களுடன் மூலவராக இருப்பார். இங்கேயோ... அவரது கையில் சுழலும், சக்கரத்தாழ்வார் தான் மூலவர். வெங்கடாஜலபதி உற்சவராக, அலமேலு தாயாருடன் உள்ளார். இதுபோன்ற வித்தியாசமான அமைப்பு, மிக அரிதாகவே இருக்கும். கஜேந்திரன் என்ற யானையை, கூகு என்ற முதலையிடமிருந்து காப்பாற்ற, கருட வாகனத்தில் வந்தார், பெருமாள். சக்கரத்தை ஏவி, முதலையை அழித்தார். யானையைக் காப்பாற்ற, கண்ணிமைக்கும் நேரத்தில், பறந்து வந்தது, கருடன். அதனால், கருடனுக்கு, இந்த கோவிலில் மிகவும் முக்கியத்துவம். விழாக் காலங்களில் மட்டும் தான் கருட சேவை செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போதும், இதை நேர்ச்சையாக செய்யலாம்.கண்ணிமைக்கும் நேரத்தில், காப்பாற்றப்பட்டது, கஜேந்திரன். அது போல, சுப நிகழ்ச்சிகள் தடைப்படும்போது, இத்தலத்தில், கருட சேவை செய்வதாக நேர்ந்து கொண்டால், அது உடனடியாக முடியும் என்கின்றனர்.மூலவர் சக்கரத்தாழ்வார், இன்னும் விசேஷமானவர். இவருக்கு, மாதத்தில், 10 நாட்களுக்கு குறையாமல் எண்ணெய் சாத்தி அபிஷேகம் செய்யப்படும். ஆனால், அடுத்த சில நிமிடங்களுக்குள், எண்ணெய் பசை விக்ரகத்தில் இருக்காது. அந்தளவுக்கு, சக்கரத்தாழ்வார் சிலை உயிரோட்டமானது. இவரது பின்பக்கம், யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் வைத்துள்ளார். நமக்கு யாரேனும் அநியாயம் செய்து விட்டால், இவரிடம் சொல்லி விட்டால் போதும்... நான்கு திசையில் அவர், எங்கு ஓடி ஒளிந்தாலும், சக்கரங்கள் பறந்து சென்று தாக்கும் என்கின்றனர்.திருநெல்வேலியில் இருந்து பத்தமடை, 22 கி.மீ., இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., துாரத்தில், கரிசூழ்ந்தமங்கலம் உள்ளது. பத்தமடையில், சுவாமி சிவானந்தர் அவதரித்தார். ஆக., 7ல் நடக்கும், கருட ஜெயந்தியன்று, இங்குள்ள, விசேஷமான கருடாழ்வாரை வணங்கி வரலாம்.தி. செல்லப்பா