கடவுள் நம்மை காத்தருள்வார்!
சுவாமி ராமதாசரும், அவரது சீடரும் தீர்த்த யாத்திரை போய் கொண்டிருந்தனர். அதிகாலையில் நடக்க ஆரம்பித்து, பகல், 12:00 -மணியளவில் வழியில் உள்ள கிராமத்தில் பிட்சை வாங்கி உண்பர். அதன்பின், அடுத்த நாள் பகல், 12-:00 மணிக்கு, அடுத்த கிராமத்தில் உணவு. இப்படித்தான் அவர்கள் தீர்த்த யாத்திரை நடந்தது. ஒருநாள், உச்சிவேளைப் பொழுதில் அவர்கள், ஒரு கிராமத்தை அடைந்தனர். கிராமத்திற்கு வெளியே ஒரு கோவிலைக் கண்டு, அங்கேயே தங்கினர்.'கிராமத்திற்குள் போய், பிட்சை வாங்க வேண்டாமா?' எனக் கேட்டார், சீடர். 'வேண்டாம்... நாம ஜபம் செய்து, இங்கேயே இருப்போம். பகவான் படியளப்பார் பார்...' என்றார், ராமதாசர். குருவின் வார்த்தைகளில் சீடருக்கு நம்பிக்கை இல்லை. வேறு வழியின்றி ராமதாசருடன் சேர்ந்து, நாம ஜபம் செய்யத் துவங்கினார். நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர, யாரும் வரவில்லை; எந்த வழியும் தெரியவில்லை. சீடரோ, பசியால் நெளிந்தார்.சற்று நேரத்தில், கோவிலுக்கு வந்த ஒருவர், இவர்களைப் பார்த்து, 'உங்களுக்கு இன்னும் பிட்சை ஆகவில்லை போலத் தோன்றுகிறதே...' என்றார்.'இன்னும் பிட்சை ஆகவில்லை. ஆனால், ஊருக்குள் போய் கேட்கும் எண்ணமில்லை. பகவானாகப் பார்த்து அனுப்பி வைத்தால் தான் உண்பது- என்ற தீர்மானத்தில் இருக்கிறோம்...' என்றார், ராமதாசர். 'பகவான் தான், என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று, வைத்துக் கொள்ளுங்களேன். துறவிகளான உங்களுக்குப் பிட்சை செய்து வைப்பதில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ஆனால் நானோ, ஜாதியில் தையற்காரன். அடியேன் பிட்சையிட்டால், தாங்கள் ஏற்பீர்களா?' எனக் கேட்டார், வந்தவர்.'ஐயா... -துறவிகளாகிய எங்களுக்கு, ஜாதி வேறுபாடு கிடையாது. எங்களுக்கு அனைவருமே கடவுளாகத்தான் தோன்றுகின்றனர்...' என்றார், சுவாமி ராமதாசர். தையற்காரருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சுவாமி ராமதாசரையும், அவரது சீடரையும், தன் வீட்டிற்கு அழைத்துப் போய், அவர்களுக்குப் பிட்சையிட்டார்.பிட்சை முடிந்தவுடன், குருவும், சீடனுமாகப் புறப்பட்டு, மறுபடியும் கோவிலுக்குத் திரும்பினர்.'பகவான், இன்று நம்மைத் தேடி, உணவை அனுப்பி வைத்தார் பார்த்தாயா... நமக்கு கொடுக்கத் தாமதமானால், அதைக் கொடுக்க, பகவான் மறுக்கிறார் என நினைக்கக் கூடாது...' என்றார், சுவாமி ராமதாசர். தெய்வம் நம்மை காப்பாற்றும்; யாரையாவது அனுப்பி, நம் அல்லல்களை தீர்க்கும்! - பி.என். பரசுராமன்