அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது 35. எனக்கு ஒன்பது வயதில், ஒரு பையனும், ஆறு வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் டி.எம்.இ., படித்துள்ளேன். ஒரு தனியார் நிறுவனத்தில்,பணிபுரிகிறேன். என்னை விட, ஒரு வயது மூத்தவர் என் கணவர். அவர், எங்கள் ஊருக்கு அருகிலேயே உள்ள சிற்றூரில், ஆரம்ப கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறார்.எனக்கு ஒருமுறை, நடு இரவில், ஆழ்ந்த உறக்கத்தில் வலிப்பு வந்து, 'வீல்' என்று கத்தி விட்டேன். உறக்கத்தில் மட்டுமே வருகிறது. பகலில் வருவதில்லை. நாக்கையும் நன்கு கடித்து விடுகிறேன்.இதைக் கண்ட என் கணவர், எங்கள் வீட்டில் ஏமாற்றி கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டனர் எனக் கூறி, தினமும் குடித்து விட்டு வந்து, என்னையும், என் வீட்டாரையும் கண்ட படி திட்டுகிறார். எனக்கு வலிப்பு வந்த உடன், என் பெற்றோருக்குத்தான் போன் செய்வார். அவர்கள் வந்து மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.இரண்டு முறை, வேறு வேலைகள் இருந்ததால், அவர்கள் வரவில்லை. அதற்கு பயங்கரமாய் திட்டி விட்டார். என் பெற்றோருக்கு நாங்கள் மொத்தம் நான்கு பிள்ளைகள். இரண்டு பெண், இரண்டு ஆண். நான் இரண்டாவது பெண். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. என் பெற்றோருக்கு என் மேல் பாசமில்லை என்று பேசுகிறார். நான், என் சம்பளத்தில் தான் சென்ற மூன்றரை வருடங்களாக நியூரோ சர்ஜன் சிபாரிசு செய்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டு வந்தேன். ஆனால், எந்தவித மாற்றமும் இல்லை. எக்கசக்க மாத்திரை மற்றும் செலவு என்று மாத்திரை சாப்பிடுவதை, சென்ற மூன்று மாதமாக நிறுத்தி விட்டேன்.எங்கள் வீட்டில் போதுமான வசதி இல்லை. அப்பா தமிழாசிரியராக வேலை பார்த்தார். பள்ளி நிர்வாகம் அப்பாவுடன் சேர்த்து, ஐந்து பேரை காரணமின்றி, 'டிஸ்மிஸ்' செய்து விட்டது. அதனால், பென்ஷன் இல்லை; எந்த பணமும் வரவில்லை. அதனால், என் பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.என் நோய் தீர வேண்டும். அதற்கு, சரியான டாக்டரை நான் பார்த்து சிகிச்சை எடுக்க, தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். எங்களிடம் பண வசதி இல்லை. யாரை அணுகலாம்?என் பெற்றோரோ, என் உடன் பிறந்தவர்களோ என் புகுந்த வீட்டிற்கு வருவதே இல்லை. இவரும், என் அம்மா வீட்டிற்கு வருவதில்லை.எனக்கு ஒரு சிறு உதவி கூட செய்ய மாட்டார். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, திரும்ப அழைத்து வருவது, கடைக்கு செல்வது முதல் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்கிறேன். என் கணவர் ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த மாட்டார். வலிப்பு வந்த நாட்களில் கூட காலையில் வழக்கம் போல் வேலைகள் முடித்து, வேலைக்கு கிளம்பி விடுவேன். அன்று முழுவதும், தலை பாரமாக இருக்கும்.நான் பலவற்றை நினைத்து மிகுந்த வேதனைப்படுகிறேன். அவருடைய சம்பளம் எவ்வளவு என்று கூட தெரியாது. கேட்டால் திட்டுகிறார். பிள்ளைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என் நோய்க்கு சரியான சிகிச்சை எங்கு எடுப்பது, அதிகம் கடன் பட்டுள்ளதால், அதிகம் செலவழிக்க முடியாமல் தவிக்கிறோம். நான் மனநிம்மதியுடன் வாழ சரியான வழி காட்டுங்கள். உங்களை என் தெய்வம் போல் எண்ணியுள்ளேன்.என் கணவர் அடுத்த வர்களிடம் பழகும் பழக்க, வழக்கம் மிகவும் நாகரிக மாகவும், அடக்கமாகவும் இருக்கும். குடித்து விட்டு வந்து அடிக்கிறார் என்றால் நம்ப மாட்டார்கள்.உடன் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.இப்படிக்குஅன்பு மகள்.அன்பு மகளுக்கு —மகளே... மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல உனக்கு, உன் உடல், கணவர் நடத்தை என, இரண்டு பக்கத்திலிருந்து ஏகப்பட்ட இடிகள்.முதலில், உனக்கு இருக்கும் வலிப்பு நோய் பற்றி, சில விஷயங்களைப் பார்ப்போம்.இதை, 'சைக்கோ நியுரோலாஜிக்கல்' என்றும் அழைப்பர். அதாவது, மனசு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய். மூளையில் ஏற்படும் நோய்களின் அறிகுறியாகவும், மூளையில் உள்ள சில நரம்பு அணுக்களில் இயல்புக்கு மீறி ஏற்படும் மின் அலைகளின் பாதிப்பில் இந்நோய் வருகிறது. இது பிறப்பின் போதும், மூளையில் அடிபடுவதாலும், நோய் கிருமிகள் தாக்குதலாலும் வருவதுண்டு.நேரம், காலம் இல்லாமல் வரும் இந்த நோய். நோயாளி விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும், நடந்து செல்லும் போதும், வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதும் எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் வரலாம். இதற்கு ஆண், பெண், வயது வித்தியாசம் கிடையாது.எப்பொழுது, எந்த சூழலில், எவ்வளவு நேரம் வலிப்பு இருக்கிறது. உடலில் ஏற்படும் மாற்றங்கள், தலைவலி, வயிற்றில் சங்கடம், அச்சம், மயக்கம் போன்ற விவரங்களைக் குறித்து வைத்திருப்பது நலம். ஏன் என்றால், இவைகள் தான், எச்சரிக்கை அறிகுறிகள். மருத்துவர் சிகிச்சை அளிக்க உதவும் புள்ளி விவரங்கள்.அதனால், வலிப்பு வரும்போது சூழல், நேரம், உன் மனநிலை போன்றவைகளை தனியாக குறித்து வைத்து, மருத்துவரிடம் கூற வேண்டும்.தேவையான பரிசோதனைகளை செய்ய வேண்டும்.முறையான சிகிச்சையை இதற்கான ஸ்பெஷலிஸ்டுகளிடம் முதலில் எடுத்து, பின், அருகில் உள்ள டாக்டரிடம், 'ரிவியு' மற்றும் 'பாலோ அப்' நடவடிக்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான மருந்து வகைகளை, குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள், தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.இடையில் வேறு மருத்துவம் பார்க்க போகிறேன் என, தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளை விட்டு விடக் கூடாது. ஏனெனில், மாத்திரை மருந்தை நிறுத்தினால், அடுத்த நாளே வலிப்பு வரலாம்.நல்ல மருத்துவ வசதிகள், இலவச சிகிச்சைகள், ஆலோசனைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. உடனே, அந்த துறையைச் சார்ந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.சரி, உன் கணவரின் பிரச்னைக்கு சில ஆலோசனைகள்...உனக்கு இப்படி இருப்பதால் தான், 'தண்ணி அடிக்கிறேன்' என்று, உன் கணவர் கூறினால், அதை ஏற்றுக் கொள்ள இயலாது. தான் தப்பிப்பதற்காக உன் மீது பழி சுமத்துகிறார்.எனவே, உன் கணவரின் சம்மதத்துடன், அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள, 'மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு தரும் மாற்று சிகிச்சை பிரிவு'க்குச் சென்று பயன் பெறலாம். அங்கு மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் தகுந்த ஆலோசனைகளை உனக்கும், உன் கணவருக்கும் தருவர்.இவற்றுக்கும் மேலாக, சில இடங்களில் ஏ.ஏ., குரூப், (ஆல்கஹாலிக் அனானிமஸ்) அதாவது குடிநோய்க்கு அடிமையானவர்கள், சிகிச்சைக்கு பிறகு மனம் திருந்தி, ஒரு சங்கம் அமைத்திருக்கின்றனர். அங்கு, உன் கணவர் சென்றால், குடிப்பதை எப்படி நிறுத்தலாம். நிறுத்தியதை எப்படி தொடரலாம் என்று ஆலோசனைகளை தருவர். அவர்களின் அனுபவம், அணுகுமுறை உன் கணவரின் மனநிலையை நிச்சயமாக மாற்றும்.மேலும், உன் கணவர் ஏன் அதிகமாக குடிக்கிறார்... வெளி உலகத்தில், அன்புடன் சிரித்து பேசுபவர், வீட்டிற்கு வந்தவுடன் ஏன் உன்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்... இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய். அதற்கு ஏற்றார் போல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்.மகளே... உன் மனநிலை சந்தோஷமாக இருந்தால்தான், வலிப்பு நோயிலிருந்து விடுபட முடியும். ஆக, உன் சந்தோஷத்திற்கு முதலில் நீயும், பின், உன் கணவரும் காரணமாக இருப்பதால், உன் கணவரை நன்கு புரிந்து, அன்பால் அவரை அணுகி, நீ, அவருக்கு முழுமையாக இருக்கிறாய் என்ற நம்பிக்கையை தந்து, அவரை நல்ல மனிதனாக மாற்ற உன்னால் தான் முடியும். அன்பு ஒன்றே உங்கள் இருவரின் மகிழ்ச்சிக்கும் நல்ல மருந்து. நீ அடையப் போகும் மகிழ்ச்சி, அந்த நன்னாள் வெகு தொலைவில் இல்லை என்று எனக்கு தெரிகிறது.அன்புடன்... வாழ்க வளமுடன்!— என்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.