உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 30; என் கணவர் வயது, 39. சிறு தொழிலதிபர்; திருமணமாகி, 12 ஆண்டுகளாகின்றன. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவரின் உடன் பிறந்தோர் ஒரு அண்ணன், இரு தங்கைகள். அப்பா இறந்து விட்டார்; அம்மா மட்டுமே அவருக்கு உண்டு. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, என் தம்பி மட்டுமே!எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. என் கணவர் பி.ஏ., படித்துள்ளார்; நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்.எங்கள் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணிபுரிபவள், என் கணவரிடம் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாள். அவளும், பி.ஏ., படித்துள்ளாள். என் கணவர் கறுப்பாகவும், நான் சிவப்பாகவும் இருப்பேன். அன்பும், படிப்பும் இருந்தால் போதும் என்று, அவரை மணந்து கொண்டேன்.எங்கள் திருமணத்தின் போது அவருக்கு வேலை எதுவும் இல்லை. ஆரம்பத்தில், ஆறு ஆண்டுகள் சந்தோஷமாக தான் இருந்தோம். தொழில் ஆரம்பித்து, கையில் பணம் வரவும், மனம் மாறி விட்டார். எதற்கெடுத்தாலும் பொய், ஏமாற்றுதல் என, என் கணவர் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டு, 'நம்மிடம் வேலை செய்யும் பெண்ணுடன், உங்களுக்கு தொடர்பு உள்ளதா?' என்று நேரடியாக கேட்டதற்கு, இல்லை என்று மறுத்தார்.ஒருநாள், என் கணவரின் மொபைல் போனுக்கு, 'நீங்கள் என்னை மறந்து விடுவீர்களா?' என்று எஸ்.எம்.எஸ்., வந்தது. அதைப் பார்த்து, அவரிடம் கேட்டதற்கு, முதலில் இல்லையென்றார்; பின், 'ஆமாம்' என்றார். 'இனிமேல் அவளை பார்க்கவோ, பேசவோ மாட்டேன்...' என்று, என் மீதும், இரு குழந்தைகள் மற்றும் கடவுளின் மீதும் சத்தியம் செய்ததால், அவரை நம்பினேன்.என் வற்புறுத்தலின் காரணமாக, அவளை வேலையில் இருந்தும் நிறுத்தி விட்டார். அவளும் திருமணம் ஆனவள் தான். அவளுக்கும், ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவள் கணவரிடம் சென்று, 'என் கணவரிடம் இனிமேல் உங்கள் மனைவி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது...' என்று கண்டிப்பாக சொன்னேன். அவரும், 'இனிமேல் என் மனைவி, உன் கணவரிடம் தொடர்பு கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார்.ஒருநாள் அப்பெண்ணின் கணவர், எனக்கு போன் செய்து, 'என் மனைவியும், உன் கணவரும் சந்தித்துக் கொண்டு தான் உள்ளனர்; அவள் என்னிடம் விவாகரத்து கேட்கிறாள். நான், அவளை விட்டு பிரிந்து விட்டேன். அவர்கள் இருவரையும் பழிவாங்க வேண்டும் என்றால், நீ என்னுடன் பேசு; நாம் தொடர்பு வைத்துக் கொள்வோம்...' என்றான். நான் அதற்கு,'போலீசில் புகார் செய்வேன்...' என்றதும், 'உன் பிரச்னையை நீயே பார்த்துக் கொள்...' என்று கூறி, விலகி விட்டான்.அவன் பேசிய வார்த்தைகளை என் கணவரிடம் கூறிய போது, 'நான் எந்த தவறும் செய்யவில்லை; நீ சந்தேகப்பட்டால், அதற்கு நான் என்ன செய்வது...' என்றார். நானும் இரண்டு ஆண்டுகளாக எந்த கேள்வியும் அவரிடம் கேட்டதில்லை.ஆனாலும், என்னிடம் அடிக்கடி சண்டை போடுவார். நான் வேலை டென்ஷனில் பேசுகிறார் என்று நினைத்துக் கொள்வேன். என் திருமணத்தின் போது என் பெற்றோர், 35 சவரன் நகையும், வீடும், வீட்டு உபயோகப் பொருட்களும் வாங்கிக் கொடுத்தனர். அனைத்து நகைகளையும் அடகு வைத்ததுடன், 'உன் அப்பா, அம்மா என்ன செய்தனர்...' என கூறி திட்டுகிறார். அத்துடன், வரதட்சணையாக, 10 லட்சம் ரூபாய் எங்கள் வீட்டில் வாங்கி வரச் சொன்னார்; நான் மகளிர் போலீசில் புகார் செய்தேன். அவரை அழைத்துப் பேசி, கவுன்சிலிங் வைத்து, 'இனி பொருளோ, பணமோ கேட்க மாட்டேன்...' என்று எழுதிக் கொடுத்தார்.பின், என்னை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே, எனக்கு தெரியாமல், அவளை வேலையில் சேர்த்துக் கொண்டதுடன், இருவரும் வீடு எடுத்து, ஆறு மாதங்களாக தங்கியுள்ளனர். இந்த விஷயம் எங்களிடம் பணிபுரிபவர் மூலமாக தெரிய வந்து, அவளிடம் சென்று, என் கணவரை விட்டுத் தருமாறு கெஞ்சினேன். அதற்கு அவள், 'முடியாது; அவர் எனக்கு தான் சொந்தம்...' என்றாள். கோபம் வந்து, அவளை அடித்து விட்டேன். அவளிடம் உள்ள மொபைல் போனையும் எடுத்து வந்து விட்டேன். அந்த போனில், என் கணவரும், அவளும் படுக்கை அறையில் உள்ள காட்சியை பார்த்து, தற்கொலைக்கு முயன்றேன்.அதன்பின், என் கணவர் என்னிடம் வந்து, 'இனிமேல் நான் உன்னிடம் பொய் பேச மாட்டேன்...' என்றார். நான் அவரை நம்பவில்லை. போலீசின் மூலமாக எழுதிக் கொடுத்த பின்னரே, அவருடன் மறுபடியும் சேர்ந்து வாழ்கிறேன். என் இரு குழந்தைகளுக்கும் அப்பா மீது பாசம் அதிகம். அவர்களுக்காக என் மனதை மாற்றிக் கொண்டேன். இபபோதும் என் கணவர் என்னிடம் சண்டை போடுகிறார்; அன்பாகப் பேசுவதில்லை.என் கணவருடைய அனைத்து தவறுகளுக்கும், என் மாமியார் உடந்தை. ஏனென்றால், அவளுடைய மொபைல் போனில், என் மாமியாரும் உள்ளார். அன்றிலிருந்தே அவருடன் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்வதில்லை.அம்மா... என் கணவருடைய தவறை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை. நான் என்ன செய்வது?— உங்கள் அறிவுரைக்காக,ஏங்கித் தவிக்கும் அன்பு மகள்.அன்புள்ள மகளுக்கு —ஓர் ஆணின் கையில் பணப் புழக்கம் அதிகம் இருந்தால் மது, மாது, சூது தேடி வரும். அதுதான், உன் கணவரிடம் காணப்படுகிறது. பணியை தக்க வைக்கவும், பணத் தேவைக்காகவும் உன் கணவரை, அப்பெண் வலை வீசி பிடித்திருக்கிறாள். நீயும் உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து, உன் கணவரின் துர்நடத்தையை எதிர்த்து போராடியும், உன் கணவர் திருந்தவில்லை.நீயும் வேண்டும், அவளும் வேண்டும் என்ற அல்லாட்டத்தில் தான், உன் கணவர் பொய் சத்தியம் செய்துள்ளார். அவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது, 'நம் இரு மகள்களின் எதிர்காலத்துக்காகவாவது உன் கள்ளத் தொடர்பை கழுவு...' என, அன்பாக எடுத்துரை. கணவனின் கவனத்தை கவரும் வண்ணம் உன்னை நீ, உடலாலும், மனதாலும் புத்துணர்வுடன் இருக்கப்பார்.மாமியார் கள்ள உறவுக்கு உடந்தை என நினைத்து, அவருடனான நல்லுறவை துண்டிக்காதே. உண்மையில் உடந்தையாக இருந்தால் கூட, மாமியாரின் மனசாட்சியை தட்டி எழுப்பும் வண்ணம் உறவு பாராட்டு.'அப்பா... எங்களுக்கு நீ வேணும்; எங்களை நீ நேசிக்கிறாய் என்றால் நீ அம்மாவுக்கும், எங்களுக்கும் உண்மையாக இரு. வி லவ் யூ அப்பா...' என மகள்களை பேசச் சொல்லு.உன் கணவனின் கள்ளக் காதலி, நிச்சயம் உன் கணவனுக்கு உண்மையாக இருக்க மாட்டாள். கோவலன் போல, உன் கணவன் உன்னிடம் திரும்புவான். அப்படி திரும்புவதற்கு, புத்திசாலித்தனமாய் சதுரங்க காய்களை நகர்த்து. வெற்றி பெறுவாய். வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !