ஓய்வு இல்லம்!
மதுரையை நெருங்க நெருங்க, மோகனுக்கு, மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி. ஏறக்குறைய, 15 ஆண்டுகளுக்கு முன், கடைசியாக, ராகவன் மகன் திருமணத்துக்கு வந்தது.ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்ற போது தான், மதுரையின் மாற்றங்கள் உறைத்தன. குளித்து முடித்ததும், ராகவன் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டார், மோகன்.சிம்மக்கல்லில் ஒரே காம்பவுண்ட்டில் இருந்த, 18 வீடுகளில் ஒன்று, ராகவன் வீடு; மற்றொன்று, மோகன் வீடு.ஒரே இடத்தில் பிறந்து, ஒன்றாக படித்தவர்கள். ஆசிரியர் வேலை கிடைத்து, கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி பெற்றதும், திருப்பாலைக்கு மாறினார், ராகவன். சென்னை, டில்லி என மாறிக் கொண்டே இருந்தார், மோகன்.மோகனுக்கு ஒரே பையன்; மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை பார்ப்பதால், டில்லிக்கே சென்று விட்டார். மதுரையிலே, 'செட்டிலாகி' விட்டார், ராகவன்.மொபைல் போனில், நண்பன் ராகவனுடன் அடிக்கடி பேசிக் கொண்டாலும், மதுரைக்கு திடீரென வந்து, அவனை சந்தித்து, மணிக்கணக்காக பேச வேண்டும் என்பது மோகனின் எண்ணம்.ராகவன் மனைவி மைதிலி வைக்கும் வத்தக்குழம்புக்கு, மோகன் குடும்பமே அடிமை. தன் மனைவியுடன் செல்ல வேண்டும் என்பதாலேயே, பலமுறை மதுரை பயணம் ஒத்தி போடப்பட்டது.இம்முறையும் மகன், வேலை நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால், மனைவி வரவில்லை. தட்டிக் கொண்டே இருப்பதால், தனியாகவாவது வந்து விட வேண்டும் என, மோகன் மட்டும், மதுரைக்கு புறப்பட்டு வந்து விட்டார்.கால்டாக்சியை, 'புக்' செய்து, திருப்பாலை புறப்பட்டார். திருப்பாலை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் இருந்தது, ராகவன் வீடு.விசாரித்த போது, 'இடதுபுறம் திரும்பி நேராக செல்லுங்கள்...' என்றனர். ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருந்தாலும், ராகவன் வீடு பெரிய அளவில் மாற்றங்களின்றி அப்படியே இருந்தது.'ராகவன் வீட்டில் இருப்பானா, வெளியே சென்று இருப்பானா...' என யோசித்தபடி, காரை விட்டு இறங்கினார், மோகன். வாசலில் கார் நிற்பதை பார்த்த ஒரு வாண்டு, ஓடி வந்து, ''யாரு வேணும்?'' என்றது.அப்படியே ராகவனின் சாயல். ''குமாரை பாக்கணும்,'' என்றார், சிரித்தபடி.அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்த ராகவனின் மகன் குமார், ''வாட் எ சர்ப்ரைஸ்... வாங்க மாமா... எப்ப வந்தீங்க,'' என்றபடியே வீட்டிற்குள் அழைத்து சென்றான்.''காலைல வந்தேன், குமார். ஆமா...ராகவன் எங்கே?'' என்று கேட்டு, சுற்றும் முற்றும் பார்த்தார்.அடுத்த வினாடி, குமாரின் முகம் மாறியது.''மாமா... அப்பா இங்க இல்ல,'' என்றான் தயங்கியபடி.துாக்கிவாரிப் போட்டது மோகனுக்கு.''என்னடா சொல்ற... உன் அக்கா வீட்ல இருக்கானா?''''இல்ல மாமா... அங்கயும் இல்ல.''''அப்புறம்?''''முதியோர் இல்லத்துல இருக்காரு,'' என்று தயங்கி தயங்கி சொன்னான்.முதியோர் இல்லம் என்றதும் தன்னையுமறியாமல், மோகனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.''அடப்பாவிங்களா... உங்களுக்காக அவங்க எவ்வளவு சிரமப்பட்டுருக்காங்க; அவங்களை போய், அங்கே விட்டுட்டீங்களே... எப்படிடா உங்களுக்கு மனசு வந்துச்சு. உன் அக்கா எங்க இருக்கா... நாக்க பிடுங்கற மாதிரி, அவளை கேள்வி கேக்கணும்,'' என பொரிந்து தள்ளினார், மோகன்.''மாமா... பேசி முடிச்சுட்டீங்களா... எங்கள திட்டுறதுக்கு முன், நீங்க அப்பாவ பாத்துட்டு வாங்க; நானே கூட்டிட்டு போறேன்,'' என, புறப்பட்டான், குமார்.''ஒண்ணும் வேணாம்; நானே போய்க்கிறேன். அந்த முதியோர் இல்லம் எங்க இருக்கு சொல்லு?''''சத்திரப்பட்டியில,'' என்றான்.''நான் பாத்துக்குறேன்,'' என, பொருமும் மனதுடன், மீண்டும் கால்டாக்சியில், சத்திரப்பட்டிக்கு சென்றார்.சத்திரப்பட்டியில் முதியோர் இல்லத்தை பார்த்த போது, அது, பெரிய தோட்ட வீடு போல இருந்தது. கார் உள்ளே நுழைந்த போது, வாசலில் இருந்த செக்யூரிட்டி, ''யாரை பாக்கணும்?'' என்று கேட்டார்.''ராகவனை,'' என்றதும், கார் உள்ளே அனுமதிக்கப்பட்டது.வரவேற்பறையில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். அவளிடம், ''ராகவனை பார்க்கணும்,'' என்றதும், ''உட்காருங்கள்,'' என்றாள்.அந்த முதியோர் இல்லம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் இருந்தது.இன்டர்காமில் பேசி, மோகனிடம் திரும்பிய அந்தப் பெண், ''சார் தோட்டத்தில் இருக்காரு; உங்கள அங்க கூட்டிட்டு போகச் சொல்லவா, இல்ல அவரை வரச் சொல்லவா,'' என்றாள்.''இல்ல... நானே போறேன்; தோட்டத்திற்கு எப்படிப் போகணும்,'' என்றதும், உடன் ஒரு ஊழியரை அனுப்பினாள்.அருமையான சுற்றுப்புறம்; இயற்கையான காற்று. இருபுறமும் இருந்த பசுமையை ரசித்துக் கொண்டே நடந்தார். அப்போது, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நபரிடம், ஏதோ வேலை சொல்லிக் கொண்டிருந்தார், ராகவன்.துாரத்தில் மோகனை பார்த்ததும், ஓடி வந்தார்.''மோகா... எப்படா வந்தே... ஏன் போன் கூட செய்யல,'' என்றார்.''என்னடா... பார்த்து பார்த்து வீடு கட்டி, அங்க இருக்காம, உன்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்களேடா,'' என, கண்ணீர் விட்டார், மோகன்.''போடா முட்டாள்... யாரு சொன்னது என்னை இங்க கொண்டு வந்து தள்ளினாங்கன்னு... நானாத் தான் வந்தேன்,'' என்றார், ராகவன்.மோகன் அதிர்ச்சியுடன் பார்க்க, ''இங்க பாருடா... முதியோர் இல்லம்ன்னதுமே, அத தப்பான கோணத்துல பாக்க ஆரம்பிச்சுடுறோம்; ஆனா, உண்மையில வயசானவங்களுக்கு, இது தான் சரியான இடம்.''நமக்கு, 60 வயசுல, ஏன் ஓய்வுதர்றாங்க தெரியுமா? அதுக்கப்புறம் ஓய்வா இருக்கணும்ன்னு தான். நமக்கு ஓய்வு சரி... மனைவிக்கு? உனக்கே தெரியும் மைதிலியை நான் கல்யாணம் செய்யும் போது, அவளுக்கு, 18 வயசு.''அன்னிக்கு சமையல்கட்டுல நுழைஞ்சவளுக்கு என்னைக்குமே ஓய்வு கிடைச்சதில்ல. முதல்ல நமக்கு, அடுத்து நம்ம பிள்ளைங்களுக்கு. அதற்கு அடுத்து பேரப் பசங்களுக்கு சமைக்கிறது மட்டுமே அவளோட வேலைன்னு மாறிடுச்சு.''இதனால, அடிக்கடி உடம்புக்கு முடியாம போயிடுச்சு. அப்பத்தான் முதியோர் இல்லம் பத்தி யோசிச்சேன். இங்க, கணவன் - மனைவி ரெண்டு பேரும் தங்கிக்கலாம்; சாப்பாடு அவங்க கொடுத்துடுறாங்க; மருத்துவர்கள் தினமும் வர்றாங்க; சம வயசுல நிறைய பேர் இருக்கோம்.''அங்க பாரு... பாண்டி விளையாடிட்டு இருக்கா, மைதிலி. இந்த சந்தோஷம் அவளுக்கு வீட்ல கிடைக்குமா அல்லது பேரப் பசங்க முன் அவளால விளையாட தான் முடியுமா? சுருக்கமா சொல்லணும்ன்னா, இது வேற உலகம்; ஆனா, சந்தோஷமான உலகம்.''வாரா வாரம் வெள்ளிக்கிழமை இரவு, வீட்டுக்கு போயிடுவோம். சனி, ஞாயிறு ரெண்டு நாளும் பிள்ளைகளோடயும், பேரப் பசங்களோடயும் சந்தோஷமான வாழ்க்கை. அவங்க கேக்கறத சமைச்சு போடுவா, மைதிலி. எல்லாரும் சேர்ந்து எங்கயாச்சும் போவோம்.''ஒரு வாரம் மகன் வீடு; மறுவாரம் மகள் வீடு. அவங்களுக்கு முடியும் போது எல்லாரும் இங்க வந்துருவாங்க. இப்படி மாறி மாறி எல்லாரும் போவோம். நாள் கிழமைகள்ல யாராவது ஒருத்தர் வீட்டுக்கு, இங்க இருக்கற எல்லாருமே போவோம். இப்படி இது ஒரு, ஜாலியான, 'எபிசோட்!'''பிள்ளைங்கள விடுதியில சேத்து படிக்க வைக்கிறோம். அதுக்காக, பிள்ளைங்கள அங்க கொண்டு போய் தள்ளி விட்டுட்டோம்ன்னா அர்த்தம். அவங்க நல்லதுக்கு தானே செய்யுறோம். அதுபோல தான் இது!''வீட்ல எல்லாரும் வேலைக்கு போனப்புறம், என் முகத்த மைதிலியும், அவ முகத்த நானும் பார்த்துக்கிட்டு இருக்கணும். இல்லன்னா, 'டிவி'யில வர்ற அக்கப்போர பாக்கணும். அதப் பார்த்தா நல்லா இருக்கற குடும்பமும் கெட்டுப் போயிடும்.''இங்க, அந்தப் பிரச்னையே கிடையாது. வேளா வேளைக்கு சாப்பாடு, நடைப்பயிற்சி, விளையாட்டு, ஆன்மிக சொற்பொழிவுன்னு நல்லா பொழுது போகுது.''இப்ப உன்னையே எடுத்துக்க... மதுரைக்கு வந்த நீ, உன் மனைவிய கூட்டிட்டு வர முடியல. காரணம், உன் மகன், மருமக வேலைக்கு போனதுக்கு அப்புறம் பேரப் பிள்ளைகள உன் மனைவி தான் பாத்துக்கணும். அதுதானே!''நாம் இஷ்டத்துக்கு சுத்துறோம். ஆனா, மனைவிய அடுப்படில போட்டு முடக்குறோம். அன்னிக்கு விறகு அடுப்படியில போராடினாங்க. அதுக்கு ஓய்வு தந்துட்டு, இன்னிக்கு காஸ் அடுப்பு, இன்டக் ஷன், ஓவன்னு மாறியிருக்கு.''அடுப்பு மாறியிருக்கே தவிர, அடுப்படி, 'இன்சார்ஜரு'க்கு ஓய்வு தரல. நான், என் மனைவிக்கு ஓய்வு தந்திருக்கேன். எல்லாத்துக்கும் ஒரு மாற்றுக் காரணம் உண்டு. எல்லா பிள்ளைகளும் பெற்றோரை, முதியோர் இல்லத்துல கொண்டு வந்து தள்ளுறதில்ல; ஒரு சிலர் அப்படி இருக்கலாம். என் போன்றோரும் இருக்கோம்,'' எனக் கூறி முடித்தார், ராகவன். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை துாரத்தில் இருந்து பார்த்த ராகவனின் மனைவி, சிறு பிள்ளை போல் ஓடி வந்தாள்.''மோகன் அண்ணா... எப்ப வந்தீங்க, வீட்டுக்குப் போனீங்களா... குமார் சொன்னானா?'' என்று கேட்டாள்.பதில் சொல்லிவிட்டு, அவர்களை உற்று நோக்கினார், மோகன். அவள் கண்களிலும் சரி, ராகவன் முகத்திலும் சரி, வருத்தம் துளி கூட இல்லை. ''சரி... நீ எங்க தங்கியிருக்க... எத்தனை நாள் இருப்ப?'' என்றார், ராகவன்.''காலேஜ் ஹவுஸ்ல, நாலு நாள் இருப்பேன்,'' என்றார், மோகன்.''ஏன்டா... அதை காலி செய்துட்டு வீட்டுக்கு வா; நானும், மைதிலியும் வீட்டுக்கு வந்துடறோம்; சேர்ந்து எல்லா இடத்துக்கும் போகலாம்,'' என்றார், ராகவன்.''சரி, ராகவா... எங்களுக்கும் இதுல ஒரு அறை, 'ரிசர்வ்' செய்து வை; சீக்கிரத்துல நானும், என் மனைவியும் இங்க வந்துடறோம்,'' என்றார், மோகன் சிரித்தபடி.அஞ்சனா ஜெகன்