இப்படியும் ஒரு பதவி!
ஜூலை, 20, வியாசர் பூஜைவியாசர் என்றதும், நம் நினைவுக்கு வருவது, மகாபாரதம். இந்நூலை இயற்றியவரின் பெயரே வியாசர் என, நம்மில் பலர் எண்ணுகிறோம். அது பெயரல்ல; பதவி. வியாசரின் இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர்; இதற்கு, இருண்ட தீவில் பிறந்தவர் என்று பொருள். 'கிருஷ்ண' என்றால் கறுப்பு; 'கறுமை நிறம் கொண்டவர்' என்றும் பொருள் கொள்ளலாம்.வியாசர் பதவியில், பல மகான்கள் இருந்துள்ளனர். தற்போது, பள்ளிகளில் கட்டுரை நோட்டு இருப்பதைப் போன்று, 60 ஆண்டுகளுக்கு முன், வியாச நோட்டு என்றே குறிப்பிட்டுள்ளனர். 'வியாசம்' என்றால், தொகுப்பு என்று பொருள்.கடவுளால் நேரடியாக அருளப்பட்டது, வேதம்; இதில், மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் விளக்கப்பட்டுள்ளது. ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, அதிலுள்ள விபரங்களை தொகுத்தனர். இப்படி தொகுப்பவர்களை, 'வியாசர்' என்பர். வேத வியாசர் அவதார நாளை, 'குரு பூர்ணிமா' என்பர். ஆனி அல்லது ஆடி மாத பவுர்ணமியில் இந்நிகழ்வு வரும்.தேவலோக மங்கை ஒருத்தி, சாபத்தால் மீனாக மாறி, யமுனை நதியில் அலைந்தாள். ஒருசமயம், அந்த மீன், வசு என்ற மன்னனின் சுக்கிலத்தை விழுங்கி, கருவுற்றது. கருமுதிர்ந்த சமயத்தில், ஒரு மீனவனின் வலையில் அகப்பட்டது, அம்மீன். மீனவன் அதை அறுத்த போது, உள்ளே ஆண் - பெண் என, இரு குழந்தைகள் இருந்தன. இதைக் கேள்விப்பட்ட வசு, ஆண் குழந்தையை தான் எடுத்துக் கொண்டு, பெண் குழந்தையை மீனவனிடமே கொடுத்து விட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு, வளர்த்து வந்தான், மீனவன்.மிகுந்த அழகியான இவள், யமுனையில் பரிசல் ஓட்டி பிழைத்து வந்தாள். ஒருநாள், பராசரர் என்ற முனிவர் வந்தார். அவர் வந்த நேரம், உலகில் கிடைத்தற்கரிய நேரமாக இருந்தது. அச்சமயத்தில், ஒரு பெண் கர்ப்பமுற்று, குழந்தையைப் பெறுவாளானால், அக்குழந்தை, உலகையே தர்மத்தின் கீழ் கொண்டு வந்து விடும் என்பதை, தன் ஞான திருஷ்டியால் அறிந்தார், பராசரர்.இதுபற்றி, யோஜனகந்தியிடம் சொன்னார், பராசரர். முதலில் தயங்கிய அவள், பின், உலக நன்மை கருதி, தன்னை பராசரரிடம் ஒப்படைத்தாள். அவர்களுக்கு பிறந்தவரே வியாசர். பிறக்கும் போதே இளைஞனாகப் பிறந்த அவருக்கு, கிருஷ்ணதுவைபாயனர் என பெயரிட்டனர். வியாசரின் பிள்ளைகளே, கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரன் மற்றும் பாண்டவர்களின் தந்தையான பாண்டு.வியாசபூஜை நன்னாளில், நமக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை, மனதில் நினைத்து வணங்க வேண்டும். வியாசரின் விக்ரகங்கள் உள்ள திருப்பரங்குன்ற முருகன் கோவில் மற்றும் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.தி.செல்லப்பா