உள்ளூர் செய்திகள்

தெய்வம் மறந்தது இல்லை

அடியார்கள் என்பதற்கு, 'சுவாமியின் திருவடிகளில், ஆழமான பக்தி கொண்டவர்கள்' என்று பொருள்.உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:'சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்' என போற்றப்படும், மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு, தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார். நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு, அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே, 'நீ, தில்லை செல்; உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்...' என, அருள்பாலித்தாள்.தில்லைக்கு புறப்பட்ட முத்துத் தாண்டவர், நடராஜப் பெருமானை பாடித் துதித்தார். அவரது கஷ்டம் தீர, சன்னிதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில், தினமும், ஐந்து பொற்காசுகளை வைத்து அருளினார், நடராஜ பெருமான்.தன் தேவைக்கு போக, மீதியிருந்தவற்றை அல்லலுறும் ஏழைகளுக்கு அளித்து வந்தார், முத்துத் தாண்டவர். அத்துடன், 'சுவாமி தான் நமக்கு கொடுக்கிறாரே...' என்று, அவர் தில்லையிலேயே தங்கி விடவில்லை.தினமும், தன் சொந்த ஊரான சீர்காழியில் இருந்து, தில்லை சென்று, தரிசனம் முடித்து, சீர்காழிக்கு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.ஒருநாள், வழக்கப்படி, தில்லை செல்வதற்காக புறப்பட்ட முத்துத் தாண்டவர், கொள்ளிடக் கரையை அடைந்ததும் திகைத்தார்.காரணம், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால், 'ஆடல்வல்லானே... இன்று உன் தரிசனத்தை எவ்வாறு காண்பேன்... அலை கடல் போல காட்சி அளிக்கும் இந்த ஆறு, எனக்கு வழி விட அருளக் கூடாதா...' என்று பாடித் துதித்ததுடன், துணிவோடு, தண்ணீரில் இறங்கினார். உடனே, நீர் விலகி, அவருக்கு வழி விட, கைகளை கூப்பியபடியே, ஆற்றைக் கடந்தவர், தில்லையில் தரிசனம் முடித்து திரும்பினார்.மற்றொரு நாள், தில்லை சென்று, சீர்காழி திரும்பும் போது, வழியில் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில், கடும் விஷம் உள்ள பாம்பு ஒன்று, முத்துத் தாண்டவரை தீண்டியது. அவர் உள்ளம் முழுவதும், நடராஜ பெருமானே நிறைந்திருந்த நிலையில், அருமருந்தொரு திரு மருந்து... என்ற பாடலை அவர் பாட, பாம்பின் நஞ்சு இறங்கியது.இப்பாடல், இன்றும் கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகிறது.தன்னை நம்பும் அடியார்களை காப்பாற்ற, தெய்வம் மறந்தது இல்லை!பி.என்.பரசுராமன்தெரிந்ததும் தெரியாததும்!திருமண பத்திரிகையை, தாம்பூலத் தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?வெறுமனே கையில் கொடுத்தால், கொடுப்பவர் கை மேலும், வாங்குபவர் கை கீழும் இருக்கும். இதனால், அவர்கள் மனதில் ஏற்றத்தாழ்வுகள் நேர வாய்ப்புண்டு. பத்திரிகை வைப்பவரோ இல்லை அதை வாங்குபவரோ, உயர்ந்தவராகவோ அல்லது செல்வத்தால் தாழ்ந்தவராகவோ இருக்கலாம். அதனால், பத்திரிகை வைக்கும் போது அந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது என்பதற்காகவே இருவருக்கும் சமமாக நேருக்கு நேராக, தாம்பூல தட்டில் வைத்து கொடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !