உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு, நான், 32 வயது பெண். படிப்பு: எம்.காம்., பெற்றோருக்கு நான் ஒரே மகள். எங்களது குடும்பம், நடுத்தர வகுப்பை சேர்ந்தது. எனக்கு திருமணமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஆண், பெண் என, இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் வயது: 36. பெரிய நிறுவனம் ஒன்றில், மேனேஜராக பணிபுரிகிறார். கைநிறைய சம்பளம், நல்ல குடும்பம் என்று கூறி, என்னை அவருக்கு மணமுடித்து வைத்தனர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது அவரது சுயரூபம். திருமணமானதிலிருந்தே, அவருக்கு என்னை பிடிக்கவில்லை. கடமைக்காகவும், சமூகத்துக்காகவும் தான் என்னுடன் வாழ்ந்து வருகிறார். இவ்வளவு ஆண்டுகளில், ஒருநாள் கூட, என்னிடம் அன்பாகவோ, ஆசையாகவோ நடந்து கொண்டதே இல்லை. 'நான் என்ன தவறு செய்தேன்?' என்று புரியாமல் பல நாட்கள் மனநிம்மதியின்றி இருந்துள்ளேன். ஒரு கட்டத்துக்கு மேல் தான், மோசமான ஒரு ஆணாதிக்கவாதியை திருமணம் செய்துள்ளேன் என்று புரிந்தது. நான் படித்திருந்தும், வேலைக்கு போகக்கூடாது என்று தடை விதித்தார். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது, குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே என் முழுநேர வேலை. நான், நல்ல மனைவியாக இருக்க விரும்பியதால், இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஆனால், தினமும் ஒரே மாதிரி, இயந்திரம் போல் இருப்பது வெறுப்பாக உள்ளது. ஆசையாக ஒரு வார்த்தை பேச மாட்டாரா என, ஏங்குவேன். அவரோ அலுவலகம் முடிந்து வந்த பின்னும், கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து விடுவார். காபி, டிபன், சரியான நேரத்துக்கு டைனிங் டேபிளில் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அசிங்கமாக திட்டுவார். குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகளை கூட ரசிக்காமல், 'நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்...' என்று, அவர்கள் மீதும் ஆத்திரப்படுவார். இவரது குணம் தெரிந்ததோ, என்னவோ கணவரது பெற்றோர், தனியாக உள்ளனர். என் பெற்றோராலும் எதுவும் செய்ய முடியாத நிலை. என் மீதும், குழந்தைகள் மீதும் இவ்வளவு வெறுப்பை உமிழ என்ன காரணம்? அன்பில்லாத இந்த முரடனை திருத்த வழி சொல்லுங்கள், அம்மா. இந்த நரக வாழ்க்கையால் மனநோயாளி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு, பொருளாதார நிர்பந்தம், பணி அழுத்தம், ஒரு திருமணமான ஆணை, காய்ந்த கருவாடு ஆக்கி விடுகிறது. அவர்களுக்குள் ஒளிந்திருந்த விளையாட்டு சிறுவன் இறந்து விடுகிறான். அவர்களுக்குள் சுயபச்சாதாபம் பொங்கி வழிகிறது. ரசனை அற்றவர்களாகவும் ஆகி விடுகின்றனர். உணவை சுவைத்து உண்ணாமல், தீக்கோழி போல விழுங்குவர். அவர்களது கண்களுக்கு உலகம், கருப்பு - வெள்ளையாக தான் தெரியும். இவர்களது உழைப்பில் அதீத கற்பனையோ, திட்டமிடலோ இராது. ஒரு விறகுவெட்டி மாங்குமாங்கென்று விறகு வெட்டினாலும் அவர்களது, தின ஊதியம், 500 ரூபாயை தாண்டாது. ஆனால், அந்த விறகு வெட்டிக்கு உலகிலேயே தான்தான் அதிகம் உழைக்கும் விறகுவெட்டி என்ற வீராப்பு இருக்கும். உன் கணவர், ஓர் ஆணாதிக்க ஆணல்ல; அவர் ஒரு வேலையில் மூழ்கி போன ஆண். உன் கணவர் உன்னை வேலைக்கு அனுப்பாதது ஆணாதிக்க உணர்வால் அல்ல. தான் சம்பாதிப்பது குடும்பத்துக்கு போதும், மனைவி ஏன் ஒரு பக்கம் போய் சம்பாதிக்க வேண்டும்... அவள் வீட்டுக் கடமைகளை சிறப்பாக செய்யட்டும் என, நினைக்கிறார், உன் கணவர். மனைவியிடம் அன்பை, காதலை, நன்றியை, மன்னிப்பை, புன்முறுவலை காட்டுவது அனாவசியம் என நினைக்கிறார், உன் கணவர். மனைவியை கொஞ்சினால், தன் வேலையின் கவனம் சிதறி விடும் என, நம்புகிறார், உன் கணவர். ஒருநாள் நீ தலைவிரிகோலமாய் அமர்ந்து, 'இப்படி கடுமையான வேலையை குடும்ப நலனுக்காக பார்த்து ஓடாய் தேய்கிறாயே புருஷா!' என, ஒப்பாரி வைத்துப் பார்; ரசிப்பார் உன் கணவர். உழைக்கும் உன் கணவருக்கு, காபி, டிபன் நேரத்திற்கு டைனிங் டேபிளுக்கு வந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம்தானே! பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மகன், மகளை கொஞ்ச தெரியாது. 'பீடை, சனியன், திருட்டுப்பயலே, நாசமாபோவ, உங்கப்பன் இல்லைன்னா நடுரோட்டில நின்று பிச்சை எடுப்ப-...' போன்ற வசவு வார்த்தைகளை அள்ளி வீசுவர். ஓரிரு ஆண்கள் இப்படி இருந்தால் திருத்தி விடலாம். ஆனால், ஆண்கள் ஜனத்தொகையில், 80 சதவீத ஆண்கள் இம்மாதிரி, 'கேட்டகிரி'தான். கணவரின் நடவடிக்கையால், நீ மனநோயாளி ஆக மாட்டாய். நாளாக நாளாக உனக்கு மரத்துப் போய் விடும். நிதானமாக செயல்படு. உன் கணவரின் மனோபாவத்தை மாற்ற முயற்சி செய். ஐம்பது வயதில், உன் கணவர், உன் மடியில் தஞ்சம் புகுந்தாலும் புகுவார். பேய்க்கு வாக்கப்பட்டா சுடுகாட்லதானே குடும்பம் நடத்த வேண்டியிருக்கும்? -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Manjubashini
மே 25, 2026 20:16

எந்த மாதிரியான ஒரு ஆலோசனை இது?? நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்? இவரின் கணவர் ஒரு நார்சிய்ஸ்சிட் மன நிலையில் உள்ளார். அதை கூட உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?? அந்த பெண் சாதாரண அன்பு மற்றும் மதிப்பை எதிர்பார்ப்பது நியாயமில்லையா?? உன் விதி பொறுத்துக்கொள் என்று சொல்ல உங்கள் ஆலோசனை எதற்கு?? அவரின்பெற்றோர் இதையே தானே சொல்லியிருப்பார்கள்?? சரியான ஆலோசனை வழங்க முடியாவிட்டால் சும்மாவேணும் இருங்கள்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்


Sivak
மே 25, 2026 17:51

80% ஆண்கள் இப்படி தான் என்று தீர்ப்பு குடுக்கும் சகுந்தலா ... 80% பெண்கள் பேய்கள் என்று சொன்னால் ஏத்துப்பாரா இந்த சகுந்தலா .... எப்போதும் ஆண்களை வசவு பாடுவதில் மட்டும் குறியாக இருப்பவர் ... என்னை போலவே நெறைய பேர் கருத்து போட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது ...


கனோஜ் ஆங்ரே
மே 25, 2026 17:49

அம்மா தாயே...? திருமணமாகி குழந்தைகள் பெற்ற பின்னர் ஆண்கள் எப்போதாவது சிரித்து பார்த்திருப்பீர்கள்...? ஆனால்... அவன் ஊழை கண்ட கனவை போல... சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்... யாருமே இல்லாத நட்டநடுச் சாலையில், தன் குடும்பத்தை எண்ணி... சாட்சிகளே கண்ணீர் சிந்தியதை பார்த்திருக்கிறீர்களா...? சிலரை வைத்து பலரை எடை போடாதீர்கள்....? நீங்கள் எந்த பொது போக்குவரத்திலும் சென்று பாருங்கள்... வேலைக்கு செல்லும் ஆண்கள் சிரித்தோ, புன்னகைத்தோ பார்க்க முடியாது... அவன் வேலைக்கு போகும்போதும், வரும்போதும்...? அவன் அவனுக்குள்ளே புதைந்து போகிறான்...?


Rathna
மே 25, 2026 13:12

அவருக்கு வேலையில் என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிலர் வேலையில் உள்ள பிரச்சனைகளால் வீட்டில் எரிந்து விழுவார்கள். அது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் வேலைக்கு செல்வதன் அவசியத்தை உறவினர் மூலம் புரிய வைக்கலாம். சில ஆண்கள், அழகான பெண்கள் வேலைக்கு போனால் கெட்டு விடுவார்கள் என்று நினைக்க வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்வது போல பல சம்பவங்கள் நடக்கிறது. நீங்கள் நேராக பேச முடியாவிட்டால் உறவினர் மூலம் பேசி தெரிந்து கொள்ளலாம். மேலும் பிரச்சனைகளை அவர் மீது போடாமல், அரவணைத்து செல்வது நல்லது.


K.n. Dhasarathan
மே 24, 2026 20:22

சகுந்தலா அம்மையாருக்கு எப்போதும் ஆண்களை மட்டம் தட்டி பேசுவதில் ஒரு பிரியம். ஆண்களுக்கு பொறுப்பு இல்லாமல் இருந்தால் பெண்கள் தாங்க மாட்டார்கள், அதிலும் 80% பேர் அப்படித்தானாம், சொல்லலாமா ? ஆண்கள் வெளியில் அலைந்து, வேலைகள் பல செய்து, பல வித வலிகளையும் தாங்கி, வீட்டிற்கு வந்து, இங்கும் வேலைகள் செய்து, பல வலி களையும் சுமந்து, எதிர் வரும் வம்புகளையும் கண்டு, ஒதுங்கி போயி வாழ்ந்து கொண்டு இருக்கிறான். குறைகள் இருக்கலாம், அதை எப்படி சரி செய்வது என்று மட்டும் பேசுங்கள். ஆண்கள் குலத்தையே குறைகள் சொல்வது சரி அல்ல.


Lakshmanan KR
மே 24, 2026 15:40

100 சதவீத பெண்கள் பொறுப்பற்றவர்கள் என்று யாரும் சொன்னால் இந்த அம்மா ஏற்று கொள்வார்களா என்ன ? தனி நபர்களை வைத்து அனைவரையும் ஒரே மாதிரி அதிலும் தொடர்ந்து ஆண்களை வசை படும் இந்த அம்மாவுக்கு மன நல ஆலோசனை தேவை


Lakshumanan Aruna
மே 24, 2026 09:50

ஐம்பது வயதுக்கு மேல் தஞ்சம்புகுந்து!? கணவர் ஒரு மனநோயாளி மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறவும்.


Natarajan Ramanathan
மே 24, 2026 09:31

80 சதவிகிதம் பெண்கள் பேயாக இருப்பதால் இந்த பிரச்சனை. பேய்கள் மரத்தில் இருந்து இறங்கி வந்தாலே இந்தமாதிரி பிரசனைகள் தீர்த்துவிடும்.


நிக்கோல்தாம்சன்
மே 24, 2026 09:02

குறை சொல்லும் பழக்கத்தை விட்டு குடும்பத்தை முன்னேற்றும் வழியை பாரு , கையில் இருக்கும் மொபைலை தூக்கி தூரப்போட்டு குடும்பத்திற்காக உழைக்கும் உனது கணவனின் நலம் பேணா முயற்சி செய்


Sivak
மே 25, 2026 17:54

நீங்கள் கூறியதுகூட காரணமாக இருக்கலாம் .. பெண்கள் மொபைலில் மூழ்கி கிடப்பது நெறைய குடும்ப பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது ....