ஞானானந்தம்: அரசனின் ரகசியம்!
ஓர் அரசர், நல்லாட்சி புரிந்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் மனைவியான அரசியோ, பெரும் கடவுள் பக்தை. பெரும்பாலான நேரத்தை இறை வழிபாட்டிலும், அவர் நாமத்தை சொல்வதிலும் கழித்து வந்தாள். அவள் எல்லா விதங்களிலும் மகிழ்ச்சியாகவே இருந்தாள், ஒன்றைத் தவிர. தன் கணவரும், இறைவன் மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்டிருக்க வேண்டும்' என்று அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால், கணவர் இறைவனுக்கு வழிபாடு செய்தோ, இறை நாமத்தை சொல்வதையோ, அவள் பார்த்ததே இல்லை. ஒருநாள் நள்ளிரவு துாக்கத்தில் இருந்து விழித்தாள், அரசி. அருகில் படுத்திருந்த, அரசர் துாக்கத்திலேயே, 'ராம் ராம்' என்ற சொல்வதை கேட்டாள். அது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. துாக்கத்திலாவது கணவர், இறை நாமத்தை சொல்கிறாரே, என்று மகிழ்ந்தாள். அந்த அரிய நிகழ்ச்சியைக் கொண்டாட விரும்பினாள், அரசி. அடுத்த நாள் விழாவுக்கும், பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்தாள். அது வழக்கமாக நடக்கும் விழா போல் இல்லாமல், ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்தன. இதைக்கண்டு, என்ன விஷயம் என்று அரசியிடம் கேட்டார், அரசர். நடந்ததைக் கூறினாள், அரசி. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார், அரசர். காரணம் அவர் தன் இறைநம்பிக்கையை நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல், மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். அது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார். அனைவருக்கும் இறைவனின் அருளை பெற வேண்டும்; அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் உண்டு. இதற்காக இறைவனிடம் தினமும் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். வெளிப்படையான சடங்குகள் இல்லாமல், மனதிற்குள் இறைவனை நினைத்து வணங்குவதே, மனவழி வழிபாடு ஆகும். தியானம், மவுன பிரார்த்தனை, அமைதியான சிந்தனை இவை அனைத்தும் இதன் அடிப்படைகள் . கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில் இருந்தாலும், மனதினுள் இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் பிரார்த்திப்பது, உள்ளத்தால் இறைவனை உணர்வது இதுவே மிக உயர்ந்த வழிபாடு. அதனால் தான், 'மனமே கோவில், மனமே தெய்வம்...' என்றனர். இந்த வழிபாடு மனிதனுக்கு மன அமைதி, தெளிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வழங்குகிறது. தற்பெருமைக்காக வழிபடாமல், ரகசியமாகச் செய்யும் வழிபாடுதான் முழுமையான பலனைத் தரும்! அருண் ராமதாசன்!