வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2026 11:35
திருநெல்வேலி, நீங்கள் சொல்வது புதிதல்ல. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எங்கள் ஏரியாவில் நடைமுறையில் உள்ளது
பிரச்னையை உருவாக்கும் பரிசு வேண்டாமே!சமீபத்தில், என் நண்பரை சந்தித்தபோது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவரது மகள், வேலையை விட்டுவிடப் போவதாக சொல்கிறாள், என்று கூறி வேதனைப்பட்டார்.காரணம் கேட்டேன். அதற்கு அவர்...'என் பெண்ணின் பிறந்தநாள், சில வாரங்களுக்கு முன் வந்தது. அதை தெரிந்து கொண்ட அவளது மேனேஜர், புடவை ஒன்றை வாங்கி, பிறந்தநாள் பரிசாக அவளுக்கு கொடுத்திருக்கிறார். இது, அவளுக்கு பிடிக்காத போதும், நாகரிகம் கருதி மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.'இதை பார்த்த சகபணியாளர்கள், அந்த மேனேஜரோடு, என் பெண்ணை இணைத்து, ஆபீசில் வதந்தி பரப்பியுள்ளனர். இது அவளுடைய மனசை, ரொம்பவே பாதிப்படைய செய்து விட்டது. அதனால், தன் வேலையை விட்டுவிடப் போவதாக சொல்கிறாள்...' என்று கூறினார்.'இதுல, உங்கள் மகள் மீது எந்த தவறும் இல்லை. சக அலுவலக பெண் பணியாளர்களுக்கு எல்லாரையும் போல வாழ்த்து சொல்லாமல், பின் விளைவுகளை யோசிக்காமல், அதிகப்பிரசங்கித்தனமாகவும், அநாகரிகமாகவும் புடவை வாங்கி தந்த, மேனேஜர் மீதுதான் தவறு.'அதுமட்டுமில்லாமல், இதுபோன்ற வதந்திகளுக்கு பயந்து, வேறொரு வேலைக்கு சென்றால், அங்கு மட்டும், இப்படிப்பட்ட தொல்லை வராது என்பது, என்ன நிச்சயம்.'இதையெல்லாம் துணிச்சலா கடந்து போறதை விட்டுட்டு, வேலையை விட்டு விலகப்போவதாக, ஓடி ஒளியக் கூடாது. அதுவுமில்லாமல், நினைத்தவுடனேயே நல்ல சம்பளத்தில், வேலையும் கிடைக்காது, என்று உங்க மகளிடம் சொல்லுங்க...' என்றேன்.வாசகர்களே... நீங்கள் அளிக்கும் அன்பளிப்பு பொருள், பிறருக்கு பிரச்னையை உண்டாக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் .— ஆ.வீரப்பன், திருச்சி.திருமண நிகழ்ச்சியில், இப்படி செய்யலாமே!சமீபத்தில், உறவினர் திருமணத்துக்கு சென்றிருந்தேன். அது பெரிய மண்டபம். பார்க்கவே அழகாக இருந்தது.நன்கு வரவேற்று, 'உள்ளே போங்க. முதல்ல சாப்பிடுங்க...' என்றனர்.மணமக்களை வாழ்த்திய பின் சாப்பிடலாம் என்று மணமேடைக்கு சென்று, அவர்களை வாழ்த்தி, பரிசளித்து விட்டு, உணவு பரிமாறப்படும் இடத்திற்கு சென்றேன். உள்ளே நுழைந்ததும், எனக்கு வியப்பாக இருந்தது.மற்ற மண்டபங்களில் நீளமான மேஜைகளை போட்டு, வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவர். ஆனால், இங்கே, வட்ட வடிவ மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் உட்கார்ந்தேன்.ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும், ஒரு உபசரிப்பாளர் நின்றிருந்தார். அங்கு என்னென்ன உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்பதை பட்டியலிட்ட அவர், 'எந்த ஐட்டம் உங்களுக்கு வேண்டுமோ அதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஆனால், எந்த உணவுப் பொருட்களையும் வீணாக்காதீர்கள்...' என்றார்.என்ன தான் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினாலும், உணவு வீணாகக் கூடாது எனக்கருதி, திருமண வீட்டார் செய்த இந்த வித்தியாசமான வட்ட மேஜை உணவு முறை பாராட்டுக்குரியது. நீங்களும், உங்கள் இல்ல விழாக்களில் இதை பின்பற்றலாமே!— ஜெ.ரவிக்குமார், காங்கயம், திருப்பூர்.தொடரட்டும் இதுபோன்ற, 'வாட்ஸ்-ஆப்' சேவை!எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தெருவிளக்கு, பல நாட்களாக எரியாமல் இருந்தது. மின்சார நிலையத்திற்கு சென்று, தெருவிளக்கு எரியவில்லை என்று தெரிவித்தேன்.அதற்கு அவர்கள், 'தெருவிளக்கு பழுது பார்ப்பதற்கு என்று 'வாட்ஸ்-ஆப்' எண் உள்ளது. அதில், உங்கள் தெரு பெயரையும், விளக்கு கம்பத்தில் எழுதியுள்ள எண்ணையும் பார்த்து அதை, 'வாட்ஸ்-ஆப்'பில் அனுப்புங்க...' என்று சொல்லி, 'வாட்ஸ்-ஆப்' நம்பரை கொடுத்தனர்.அதுபோலவே நானும், தெருவிளக்கு கம்பத்தில் எழுதியிருந்த எண்ணையும், எங்கள் தெரு பெயரையும், 'வாட்ஸ்-ஆப்' மூலம் தகவல் அனுப்பினேன். மறுநாளே வந்து, புதிய, 'லைட்'டை பொருத்தி சென்றனர்.தெருவிளக்கு எரியவில்லை என்றால், புகார் எழுதி வைத்த காலம் போய் இப்படி, 'வாட்ஸ்-ஆப்'லேயே குறைகளை பெற்று, அதை உடனடியாக சரி செய்யும் மாற்றம் நல்ல முன்னேற்றமாக தெரிந்தது.— ஜே.கமலம், திருநெல்வேலி.
திருநெல்வேலி, நீங்கள் சொல்வது புதிதல்ல. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எங்கள் ஏரியாவில் நடைமுறையில் உள்ளது