நம்மிடமே இருக்கு மருந்து: பச்சை பட்டாணி!
பருப்பு வகையைச் சேர்ந்த, ஒரு குளிர் கால உணவு, பச்சை பட்டாணி. அமெரிக்க விவசாய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், உலகின் பலதரப்பட்ட காய்கறிகளில் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றில் இதுவும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கே, பொட்டாஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளது.பீன்சுடன் ஒப்பிடும்போது, பட்டாணி குறைந்த கலோரி கொண்டது. கண் கோளாறுகள், எலும்பு, பல் சம்பந்தமான நோய்களுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், ரத்த விருத்திக்கும் பச்சை பட்டாணி நல்லது. நம் உடலுக்கு தேவையான போலிக் அமிலம் மற்றும் பி--காம்ப்ளக்ஸ் டி.என்.ஏ., கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து, ஜீரண சக்திக்கு உதவுகிறது. இதில் கொலஸ்டிரால் இல்லை. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது.இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பை, இதிலுள்ள விட்டமின் பி3 (நியாசின்) தடை செய்கிறது. இதிலுள்ள, ஆன்டிஆக்ஸிடென்டுகள், இதய ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாஷியம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. 'நரம்புக் கோளாறுகள், சளி - காய்ச்சல், குளிர் காய்ச்சல் உள்ளவர்கள் அதிகளவில் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம், 100 கிராம் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும்...' என்கின்றனர், அமெரிக்க எம்.ஐ.டி. கல்வி நிறுவன ஆய்வாளர்கள். எனவே, பச்சை நிற பட்டாணி அவசியம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நன்மை அளிக்கிறது.சால்ட் குருமா, பிரைடு ரைஸ், கூட்டு மற்றும் நுாடுல்ஸ் என, பல்வேறு சுவையான உணவுகளை பச்சைப் பட்டாணி மூலம் சமைக்கலாம் என்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், பச்சைப் பட்டாணியை அளவாக சாப்பிடுவது நல்லது. தினசரி எடுத்துக் கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர்.- கோவீ. ராஜேந்திரன்