யாருக்கும் உதவாதவன் அன்று... ஊருக்கே உதவுபவன் இன்று!
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது, காசி மேஜர்புரம். 40 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, நடராஜன் - வீரம்மாள் தம்பதிக்கு, ஒரு குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே ஊனத்துடனேயே இருந்தது. 2.5 அடி உயரத்திற்கு மேல் வளர்ச்சி நின்று விட்டது. கால்களை மடக்க முடியாது என்ற நிலையில், எங்கே போனாலும் துாக்கிக் கொண்டு தான் போக வேண்டும். 'இந்த குழந்தையால் யாருக்கு என்ன பிரயோஜனம். உங்களுக்கும் காலமெல்லாம் சிரமம். எங்காவது கண் காணாத இடத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்...' என்றனர், சிலர். 'ஆயிரம் இருந்தாலும், இது எங்க பிள்ளை. நாங்கள் பார்த்துக் கொள்வோம்...' என்று சொல்லி, அன்பும், பாசமும் அதிகமாகவே காட்டி, நெல்லை முத்துமாரி என்று பெயரிட்டு, குழந்தையை வளர்த்தனர். தோளில் துாக்கி சுமந்த அப்பா இறந்த பிறகு, 10ம் வகுப்புக்குப் பின், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வைராக்கியத்துடன் வளர்த்த தாயை, வயதான காலத்தில், இனி நாம் தான் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன், நிற்கவும், கம்பு ஊன்றி நடக்கவும், தன் வேலைகளை தானே பார்த்து வளர்ந்தார், முத்துமாரி. உடல் ஊனமுற்றவர்களுக்கான சலுகைகளைப் பெற, அரசு அலுவலகங்களில் ஏறி, இறங்கிய அனுபவம், சமூக சேவையில் நாட்டத்தை ஏற்படுத்தியது. உடல் ஊனமுற்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களது தகுதிக்கேற்ப அரசிடமிருந்து என்னென்ன சலுகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பெற முடியும் என்பதை விளக்குவார். மேலும், அவர்களுக்கான மனுவை எழுதி, அந்த மனுவுடன் சம்பந்தப்பட்டோரை சந்தித்து, பயன் கிடைக்கும் வரை உடனிருப்பார். இதன் காரணமாக, இந்த வட்டாரத்தில் உள்ள பல உடல் ஊனமுற்றோர், பலன் பெற்றனர். இப்போது, உடல் ஊனமுற்றவர்கள் என்ற எல்லையை தாண்டி, ஏழை, எளிய மக்களின் கோரிக்கைக்காகவும், இயங்க ஆரம்பித்துள்ளார். நான் கடவுள் திரைப்படம் முதல், பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.'சென்னை வந்தால், இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கலாம் என்றனர்.'குற்றாலத்தை விட்டு விட்டு இருக்க முடியாது. ஆகவே, எங்கும் வர இயலாது...' என, உறுதியாக கூறுகிறார். சிறந்த ஆன்மிகவாதி, சித்தர்கள் பற்றி பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார். காற்றை உணவாக்கிக் கொண்டால், ஒரு நாளைக்கு, ஒரு வேளை எளிய உணவு போதும் என்று சொல்லி அப்படியே வாழ்பவர். 'சித்தர்கள் நமக்கு நிறைய சொல்லிச் சென்றுள்ளனர். குற்றாலத்தில் குடில் அமைத்து, அங்கு, ஆர்வமுடன் வருபவர்களுக்கு, சித்தர்கள் நமக்கு அருளிச் சென்றுள்ள அற்புதங்களை எல்லாம் சொல்லித்தர விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பையும், வசதியையும், சித்தர்கள் அருள்வர்...' என்று நம்பிக்கையுடன் கூறும், முத்துமாரியின் கனவு நனவாகட்டும். அவருடன் பேச: 86374 74789. எல். ராஜசேகர்