உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —என் வயது: 53. வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். பட்டப்படிப்பு படித்துள்ளேன். 24 வயதில், மகன் இருக்கிறான். அவன், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவன்.மகனுக்கு, நான்கு வயதாக இருந்தபோதே, இக்குறை தெரிய வர, மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறோம். சாதாரணமாக தான் இருப்பான். சில சமயம், மூர்க்கமாக நடந்து கொள்வான்.மகனின் குறையை அறிந்த கணவர், அவனுக்கு, 10 வயது இருக்கும் போது, எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பின், பெற்றோர் வீட்டுக்கு மகனுடன் வந்து விட்டேன்.இத்தனை ஆண்டுகளாக என் பெற்றோர் தான், எங்கள் செலவுகள் முழுவதையும் பார்த்துக் கொண்டு பராமரித்து வருகின்றனர். அவர்களுக்கும் வயதாகி விட்டது.எனக்கு ஒரு அக்கா இருக்கிறாள். திருமணமாகி வெளிநாட்டில், 'செட்டில்' ஆகி விட்டாள்.பெற்றோர் இருக்கும் வரை பரவாயில்லை. என் காலத்துக்கு பின், மகனை யார் பார்த்துக் கொள்வர்?வீட்டிலேயே, அவனுக்கு ஒரு டீச்சரை வைத்து, பாடம் சொல்லிக் கொடுத்தோம். ஆரம்பத்தில், படிக்க சிரமப்பட்டவன், இப்போது, திக்கி திணறி படிக்கிறான். 'டிவி'யில் செய்தி ஒளிபரப்பாகும் போது, ஆர்வமாக கேட்கிறான். பாத்ரூம் செல்வது, ஆடை அணிந்து கொள்வது எல்லாம் அவன் தான்.அவனுக்கு திருமணம் செய்து வைக்க, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, 'இன்னும் சிறிது காலம் போகட்டும்...' என்கிறார்.அவனது எதிர்காலத்தை நினைத்து, தினமும் மனம் வேதனை அடைகிறேன். என்னைப் பார்த்து பெற்றோரும் நிலைகுலைந்து போகின்றனர்.நான் என்ன செய்யட்டும் சகோதரி!— இப்படிக்கு,சகோதரி.அன்பு சகோதரிக்கு —உன் மகனுக்கு என்ன வகை மனநல பிரச்னை என, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. இன்னும் மருத்துவ சிகிச்சை தருகிறீர்களா அல்லது தற்சமயம் நிறுத்தி விட்டீர்களா?அதிர்ச்சிகரமான சம்பவங்கள், வீடு மாற்றம், பள்ளி மாற்றம், தலைகாயம் மற்றும் மரபு சார்ந்தும் சிறு குழந்தைகளுக்கு மன நல பிரச்னைகள் வரலாம்.இனி நீ செய்ய வேண்டியவை...* வயதுக்கு பொருத்தமான சிந்தனை, நடத்தை, சமூக திறன் மேம்பாடு மற்றும் உணர்வுகளில் சமநிலை- ஆகியவைகளை, தற்போதைய உன், 24 வயது மகன் கொண்டிருக்கிறானா என்பதை மதிப்பீடு செய்* உன் உறவினர்களும், நண்பர்களும், 'வாட்ஸ் - ஆப்' அறிஞர்களும் உனக்கு பலவிதமாய் இலவச ஆலோசனை வழங்குவர். அவைகளை துளியும் நம்பாதே* ஆண்டுதோறும் மகனுக்கு முழு உடல் மற்றும் ரத்த பரிசோதனை செய்து, அவனது நடப்பு உடல், மனநல ஆரோக்கியத்தை கணி* மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பட்சத்தில், அவன் தாம்பத்யத்தில் ஈடுபடும் தகுதி கொண்டவனா என, மருத்துவ அறிக்கை பெறு. அத்துடன் திருமணத்திற்கு பின், மனைவியை, 'ஹிஸ்டீரிகலாய்' தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதை, மருத்துவருடன் ஆலோசனை பெறு* மகனுக்கு வயது, வெறும், 24 தான். திருமணம் செய்து வைக்கும் தக்க தருணத்துக்காக இன்னும் எட்டு ஆண்டுகள் கூட காத்திருக்கலாம். மருத்துவர் முழுமையாய் பச்சைக்கொடி காட்டும் வரை காத்திரு. மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாவிட்டாலும் கவலைப்படாதே. நீ, 85 வயது வரை உயிருடன் இருந்து, 'எனக்கு நீ, உனக்கு நான்' என்ற அன்பு வாழ்க்கையை மகனுடன் வாழ்ந்து விட்டு போ* உன் மகனை, சுய தொழில் எதிலாவது ஈடுபடுத்தி, சொந்தக்காலில் நிற்க வை* மகனுக்கு வரன் பார்க்கும் நிலை வரும்போது, அவனது உண்மை உடல், மன நிலையை பெண் வீட்டாரிடம் கூறு. — என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !