உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: பெண்ணின் பெயரில் ஒரு விரதம்!

அக்., 16 - ரமா ஏகாதசிர மா என்ற சொல்லுக்கு, மகிழ்ச்சியான, அழகான, பணிவான என்ற அர்த்தங்கள் உண்டு. ரமா என்ற பெயர் லட்சுமியைக் குறிக்கும். பொதுவாக ஏகாதசி விரதத்தை, பெருமாளை நினைத்தே அனுஷ்டிப்பர். ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வந்தாலும், அக்டோபர் 8 முதல் நவம்பர் 5ம் தேதிக்குள் வரும், தேய்பிறை ஏகாதசியை மட்டும், லட்சுமிக்காக ஒதுக்கியுள்ளனர். இதனால் தான், லட்சுமியின் பெயர்களில் ஒன்றான, ரமாவைத் தேர்ந்தெடுத்து, ரமா ஏகாதசி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த விரதம் வடமாநிலங்களில் கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசியன்று அனுஷ்டிக்கப் படும். தமிழகத்தில், ஐப்பசி மாதமே இது அனுஷ்டிக்கப் பட்டு விடுகிறது. காரணம், வடக்கே மார்ச் 15ம் தேதியே சைத்ர என்னும் சித்திரை மாதம் துவங்கி விடும். அதன்படி நமக்கு ஐப்பசி நடக்கும் போது, வடக்கிலுள்ளவர்கள் கார்த்திகை மாதத்தை தொட்டு விடுவர். இந்த மாதம் அக்., 8 முதல் நவம்பர் 5 வரை இருக்கும். அந்த அடிப்படையில் இவ்வாண்டு, அக்.,16ல், ரமா ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் தோன்றியதற்கான காரணம், வியாசர் எழுதிய, பிரம்ம வைவர்த்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. முசுகுந்தன் என்ற சக்கரவர்த்திக்கு சந்திரபாகா என்ற மகள் இருந்தாள். இவளை சோபனன் என்ற ராஜகுமாரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். திருமணமான புதிதில் மாமனார் அரண்மனைக்கு வந்திருந்தான், சோபனன். அவன் வந்த அன்று ஏகாதசி விரதத்தை அரண்மனையில் கடைபிடித்தனர். ஏகாதசி விரதம் அந்த நாட்டில் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மன்னர் குடும்பத்தினர் மட்டுமின்றி, நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கு கூட தண்ணீர், தீவனங்கள் தருவதில்லை. சோபனனோ பட்டினி கிடந்து அறியாதவன். பசி தாங்காத நிலையில் மயங்கிக் கிடந்த அவன், மறுநாள் காலையில் இறந்து விட்டான். தன் கணவனின் மரணத்திற்குப் பிறகும், சந்திரபாகா தன் வாழ்நாள் முழுக்க விரதத்தைத் தொடர்ந்தாள். மறுபிறப்பெடுத்த சோபனன் தேவர்களுக்குரிய ஒரு நகரை ஆட்சி செய்ய விரும்பினான். அந்த நகரமோ பஞ்சத்தில் சிக்கித் தவித்தது. இவனைப் பார்த்த வேதியர் ஒருவர், மீண்டும் முசுகந்தனின் மகளாகவே மறுபிறவி எடுத்திருந்த சந்திரபாகாவிடம் சென்று, அவளது கணவன் தேவர்களின் நகரில் இருப்பது பற்றி சொன்னார். மகிழ்ந்த சந்திரபாகா தன் கணவரைப் பார்க்கச் சென்றாள். முந்தைய பிறப்பு கதையை விவரித்தாள். தான் தொடர்ச்சியாக ஏகாதசி விரதம் அனுஷ்டித்ததால், மறுபிறப்பெடுத்த பின்னும் இணைய முடிந்தது பற்றி சொன்னாள். தொடர்ந்து விரதத்தை அனுஷ்டித்து, தன் கணவன் ஆள விரும்பிய நகரில் லட்சுமி கடாட்சம் ஏற்பட செய்தாள். மக்கள் மகிழ அவர்கள் ஆட்சி நடத்தினர். அன்பு செலுத்தி மறைந்த வாழ்க்கைத் துணையுடன் ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வாழவும், செல்வச் செழிப்பு பெறவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !