உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு 15ல் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு 15ல் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பாலியல் வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும், மார்ச் 15ல் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப, முதன்மை விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.பெங்களூரில் கடந்தாண்டு 2024ல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, அவரது இல்லத்தில், பெண்ணும், அவரது 17 வயது மகளும் சந்தித்தனர். அப்போது, அப்பெண், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்த்து வைக்கும்படி, முறையிட்டனர்.பின், ஏப்ரல் மாதத்தில் சதாசிவ நகர் போலீசில், எடியூரப்பா மீது சிறுமியின் பெண் புகார் அளித்தார். அதில், தன் மகளை பாலியல் ரீதியாக, எடியூரப்பா துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.டி.,யும் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.தன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவின் மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணையை ரத்து செய்து, மீண்டும் புதிதாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று, பெங்களூரு கூடுதல் சிட்டி சிவில் செஷன்ஸ் - முதன்மை விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.எம்.ரமேஷ் முன்னிலையில் விசாரணை நடந்தது. அப்போது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அசோக் நாயக், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை சமர்ப்பித்தார். 'இந்த வழக்கை புதிய வழக்காக விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், பதிவுகளை ஆய்வு செய்த நீதிபதி என்.எம்.ரமேஷ், 'வழக்கில் தொடர்புடைய எடியூரப்பா உட்பட நான்கு பேரும், மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்புங்கள்' என்று உத்தரவிட்டார்.மீண்டும் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு விசாரணை முதலில் இருந்து துவங்க உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajathi Rajan
மார் 01, 2025 12:18

இப்படியே கேஸை இழுத்து கொண்டு இருந்தால் அவரும் வயதாகி விட்டது என பொய் விடுவார் அப்புறம் யாருக்கு தண்டனை வழங்குவது... ஆமா இங்க சங்கிகளும் வன்மத்தை கக்க வரவில்லை இன்னும் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை