உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் இருந்து டில்லிக்கு பறந்த உடல் உறுப்புகள்

பெங்களூரில் இருந்து டில்லிக்கு பறந்த உடல் உறுப்புகள்

பெங்களூரு: பெங்களூரு விமானப்படை கமாண்ட் மருத்துவமனையில் இருந்து, ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தங்கு தடையின்றி டில்லி, சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்றன.பெங்களூரு, ஜோகுபாளையாவில் பெங்களூரு விமானப்படையின் கமாண்ட் மருத்துவமனை உள்ளது. விபத்தில் சிக்கிய கேரள ராணுவ வீரர் ஒருவர், கடந்த 17ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர்.அறுவை சிகிச்சை மூலம், ராணுவ வீரரின் உடலில் இருந்து கார்னியா, கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல் எடுக்கப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள், டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை, சென்னையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு தேவைப்பட்டது என தெரிந்ததால், அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை குழுவினர், டில்லியில் இருந்து பெங்களூருக்கு ஏர்பஸ் 321 விமானத்தில் பறந்து வந்தனர். ஹெச்.ஏ.எல்., விமான தளத்தில் இருந்து மருத்துவமனைக்கு காரில் சென்றனர். கார்னியா, கல்லீரல், சிறுநீரகத்தை பெற்று கொண்டனர். சென்னையின் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் இருந்து வந்தவர்கள் இதயம், நுரையீரலை தானமாக பெற்று கொண்டனர்.இந்த இரு குழுவினரும் விமான நிலையத்திற்கு தங்கு தடையின்றி செல்வதற்கு வசதியாக, கமாண்ட் மருத்துவமனை, போக்குவரத்து போலீசார் இணைந்து பசுமை காரிடர் பாதையை அமைத்து கொடுத்தனர். இதன்மூலம் சரியான நேரத்திற்கு விமானத்திற்கு உடல் உடல் உறுப்புகள் சென்றன.பெங்களூரு கமாண்ட் மருத்துவமனை இதற்கு முன்பும், பல உடல் உறுப்புகளை தானமாக பெற்று, தேவைப்படுவோருக்கு அனுப்பி வைத்து உள்ளது. ஆனால், முதல் முறை இரண்டு மாநில நகரங்களுக்கு இடையில் கொண்டு சென்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை