இயர் போன் விபரீதம்: வேலுார் மாணவர் பலி
ஹெப்பால் : ரயிலில் அடிபட்டு வேலுாரை சேர்ந்த மாணவர் உயிரிழந்தார். தமிழகத்தின் வேலுாரை சேர்ந்தவர் சசிகுமார், 19. பெங்களூரு ஹெப்பால் சுல்தான்பாளையாவில் தங்கி இருந்து, தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு, காதில், 'இயர்போன்' மாட்டியபடி, நாகேனஹள்ளி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றார். அந்த மார்க்கத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற ரயில், சசிகுமார் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். காதில் 'இயர்போன்' மாட்டிக் கொண்டு சென்றதால், ரயில் வந்ததை சசிகுமார் கவனிக்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.