மெட்ரோ பில்லர்களுக்கு மின் அலங்காரம்
பெங்களூரு : கிழக்கு - மேற்கு மற்றும் வடக்கு - தெற்கு காரிடாரின், பச்சை நிறம் மற்றும் ஊதா மெட்ரோ பாதையின் முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்கள், ஜங்ஷன்களை அழகாக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ கம்பங்களுக்கு, வண்ணமயமான டைனமிக் இல்யூமினேஷன் விளக்குகள் பொருத்த, டெண்டர் அழைத்துள்ளது.எம்.ஜி., சாலை, அனில்கும்ப்ளே சதுக்கம், டிரினிட்டி சதுக்கம், பென்னிகானஹள்ளி, மைசூரு சாலை, லால்பாக் சிக்னல், ஜெயநகர், பனசங்கரி, கோரகுன்டேபாளையா, நாகசந்திரா மெட்ரோ நிலையங்களின், 160 கம்பங்கள் மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இந்த திட்டத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.மெட்ரோ நிறுவனத்தின் திட்டத்துக்கு, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயண கட்டணம் உயர்த்தப்படவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி, மெட்ரோ ரயில் கட்டணத்தை மெட்ரோ நிறுவனம் உயர்த்தியது. ஆனால் மெட்ரோ கம்பங்களை அழகாக்க, மின் விளக்குகள் பொருத்த லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முற்பட்டுள்ளது.சில வழித்தடங்களில் மட்டும், மெட்ரோ பில்லர்களுக்கு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பில்லர்களுக்கு பெயின்ட் அடிக்கவில்லை. இவைகளுக்கு பெயின்ட் அடிப்பதற்கு பதில், தேவையின்றி லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு, மின் விளக்குகள் பொருத்துவது அவசியமா என, கேள்வி எழுப்புகின்றனர்.'மெட்ரோ தண்டவாளங்களில் பாய்ந்து, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன. பயணியர் பாதுகாப்பை மனதில் கொண்டு, ஸ்க்ரீன் டோர் பொருத்த வேண்டும். அதன்பின் மெட்ரோ நிலையங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கட்டும்' என, அறிவுறுத்துகின்றனர்.