| ADDED : செப் 09, 2026 03:56 AM
தாவணகெரே: தாவணகெரேயில், சாலை விபத்தில் சிக்கிய சிறுத்தையை காப்பாற்ற சென்ற வனத்துறையினரை, அது தாக்கியது. தாவணகெரே மாவட்டம், அனகோடு அருகே தேசிய நெடுஞ்சாலை 48ல், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, சாலையை கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிறுத்தை படுகாயம் அடைந்தது. அதன் இடது கண்ணிலும், இடுப்பிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், சாலை ஓரத்தில் கிடந்தது. வலியால் துடித்து கொண்டிருந்த சிறுத்தையை நேற்று காலையில் பார்த்த அப்பகுதியினர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், சிறுத்தையின் அருகில் சென்றனர். அப்போது திடீரென சிறுத்தை அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. பின், மீண்டும் படுத்து கொண்டது. கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த சிறுத்தையை கூண்டில் அடைத்து, ஷிவமொக்காவில் உள்ள தியாவரேகொப்பா வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு துாக்கி சென்றனர். சிறுத்தை தாக்குதலில் காயமடைந்த வன ஊழியர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தாவணகெரே தாலுகாவில் உள்ள அனகோடு முதல் கொக்கனுார் கிராமம் வரையிலான பகுதியில், அதிகளவில் வன விலங்குகள் உள்ளன. இதனால், வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் சில சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சமீபத்தில் கூட லாரி மோதியதில், சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தினர்.