| ADDED : செப் 02, 2026 11:06 PM
பெங்களூரு: காளேனஅக்ரஹாரா - தாவரகெரே இடையேயான பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மெட்ரோ ரயில் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் காளேனஅக்ரஹாரா - தாவரகெரே இடையே 7.50 கி.மீ., துாரத்துக்கு ரயில் சேவை விரைவில் துவங்க உள்ளது. இப்பாதையில், நேற்று ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, பெங்., தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, பெங்., மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடந்தது. மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேசிய அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறியதாவது: இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ரயில் சேவையை துவங்குவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. திறப்பு விழா தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தேதியை அறிவித்தவுடன், ரயில் சேவை துவங்கும். இம்மாத இறுதிக்குள் ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.