மாநகராட்சி ஊழியரை
தாக்கிய பெண் கைது
பெங்களூரு, பட்டந்துார் அக்ரஹாரா குவெம்பு சாலையில், கேரளாவை சேர்ந்த வைதேகி, 28, என்பவர் தன் ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் காலையில் டீ குடித்து கொண்டிருந்தார். பின், பேப்பர் கப்பை சாலையில் வீசிவிட்டு சென்றார். இதை பார்த்த மாநகராட்சி ஊழியர் சங்கர், வைதேகியை கூப்பிட்டு ரோட்டில் குப்பை போடக்கூடாது என்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வைதேகி, ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து, மாநகராட்சி ஊழியர் சங்கரை தாக்கினார். அவர் காயம் அடைந்தார். ஒயிட்பீல்டு போலீசார், வைதேகியை நேற்று கைது செய்தனர்.
தனியாக இருந்த அதிகாரி
மாரடைப்பால் உயிரிழப்பு
ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புரா நகரில் கால்நடைத்துறை உதவி இயக்குநராக பணியாற்றியவர் வெங்கடேஷ், 55. இவரது குடும்பத்தினர், பெங்களூரில் வசிக்கின்றனர். வெங்கடேஷ், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட பின், இவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உதவிக்கு யாரும் இல்லாததால், மருத்துவமனை செல்ல முடியாமல் வெங்கடேஷ் உயிரிழந்தார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும், அலுவலகம் வராததால், அலுவலக ஊழியர் போன் செய்தார். போன் எடுக்கப்படவில்லை. சந்தேகமடைந்த ஊழியர், வெங்கடேஷ் வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவர் படுக்கையில் இறந்து கிடந்தது தெரிந்தது.
கார் மோதி மூவர் பலி
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், ஆர்.எஸ். தொட்டி அருகில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன், நேற்று முன் இரவு, பைக் சென்று கொண்டிருந்தது. அப்போது எதி ரே வந்த கார் மோதியது. மோதிய வேகத்தில் பைக் நொறுங்கியது. இதில் பயணித்த சுரேஷ், 24, மஹேந்திரா, 35, முனியப்பா, 35, ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்த மூவரும், ஹனுாரின் கொப்பா கிராமத்தை சேர்ந்தவர்கள். விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பொருட்களை வாங்க, கொள்ளேகாலுக்கு செல்லும் போது, விபத்து நடந்தது.
வயலில் சிக்கிய
37 முதலை குட்டிகள்
பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின் அவரிகோளா கிராமத்தில் உள்ள நிலத்தில், நேற்று காலை ஆங்காங்கே முதலை குட்டிகள் தென்பட்டன. இதை பார்த்த சிலர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், மொத்தம், 37 முதலைக்குட்டிகளை பிடித்தனர். இவற்றை அருகில் உள்ள ஆற்றில் விட்டனர். கிராமத்தை ஒட்டி ஆறு பாய்கிறது. இங்கிருந்து உணவு தேடி, முதலைக்குட்டிகள் வந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
குண்டர் சட்டத்தில் ஸ்டான்லி கைது
தங்கவயல் நகராட்சியின் முன்னாள் நிலை குழு தலைவராக இருந்தவர் ஸ்டான்லி, 61. இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், ரவுடி பட்டியலில் இருந்தார். மூன்று கொலை முயற்சி, 2 பாதுகாப்பு சட்ட விதிமீறல், தாக்குதல், போக்சோ, உட்பட 13 வழக்குகள் இவர் மீது பதிவாகி இருந்தன. ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எஸ்.ஐ., ஹொன்னே கவுடா கைது செய்தார். கோலார் கலெக்டர் ரவிகுமாரிடம் புகார் செய்யப்பட்டது. அவரின் உத்தரவின் படி, குண்டர் சட்டத்தில் பெலகாவி ஹிண்டல்கா சிறையில் நேற்று அடைத்தனர்.