அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் அரசு பஸ் டிரைவர்கள் டிஸ்மிஸ்?
பெங்களூரு : அடிக்கடி விபத்து ஏற்படுத்தும், அரசு பஸ் டிரைவர்களை பணி நீக்கம் செய்ய, போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.கர்நாடகாவில் பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., கல்யாண கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம், வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகம் என நான்கு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மொத்தம் 24,352 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் சமீபகாலமாக அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், பயணியர் உயிரிழப்பதும் நடந்து வருகின்றன. குறிப்பாக பெங்களூரில் பி.எம்.டி.சி., பஸ்களால் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன.டிரைவர்கள் வேகமாகவும், அலட்சியத்துடனும் பஸ் ஓட்டுவது விபத்துக்கு காரணம் என்றும், குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கவனத்திற்கும் சென்றது. விபத்துகளை தடுப்பது பற்றி, நான்கு போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.அப்போது அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களை, பணி நீக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு உள்ளது. டிரைவர்கள் செய்யும் தவறால் அரசுக்கு கெட்ட பெயர் என்றும் அதிகாரிகள் முன்பு, அமைச்சர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.