உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம் ஏன்?

 ஐ.ஏ.எஸ்., படிக்கும் மாணவர்கள் திடீர் போராட்டம் ஏன்?

பெங்களூரு: அத்திகுப்பேவில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில்லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தியும், இரண்டு மாதங்களாக வகுப்புகள் நடத்தப்படவில்லை என கூறி, அப்பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு அத்திகுப்பே பகுதியில், விஷன் ஐ.ஏ.எஸ்., எனும் பெயரில், தனியார் பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த மையத்தில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்க ஓராண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனினும், இரண்டு மாதங்களாக வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. இது குறித்து, அந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கேள்விகள் கேட்ட போது, பயிற்சி மையம் தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று தனியார் பயிற்சி மையத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறியதாவது: பயிற்சி மையத்தில் இரண்டு மாதங்களாக வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை . பயிற்சி மையம் எப்போதும் பூட்டியே இருக்கிறது. கட்டடத்திற்கு வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தி உள்ளோம். இருப்பினும், கட்டடத்திற்கு வாடகை செலுத்தாததற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. எங்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்டு உள்ளோம். எங்களது பணம் உடனடியாக திருப்பி தரப்பட வேண்டும். எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையத்தில், பயிற்சி மையம் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வகுப்புகள் மீண்டும் தொடருமா. எங்கள் பணம் திரும்ப கிடைக்குமா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்