பெங்களூரு: சுதந்திர பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால், பல அமைப்புகள் பூங்காவின் வெளியே போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரின், சேஷாத்ரி சாலையில் 22 ஏக்கர் பரப்பளவில், சுதந்திர பூங்கா அமைந்துள்ளது. இதுவரை இப்பூங்கா ஆயிரக்கணக்கான போராட்டங்களை கண்டுள்ளது. விவசாய சங்கங்கள், ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் இங்கு போராட்டம் நடத்தியுள்ளனர். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் கீழ், சுதந்திர பூங்காவில் மேம்பாட்டு பணிகளை துவக்கியுள்ளது. இதனால் பூங்காவின் உட்புறம் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் நடத்த முடியாமல் சங்கங்கள், அமைப்புகள் பூங்காவின் வெளியில் போராட்டம் நடத்துகின்றன. விரைவில் பணிகளை முடித்து, பூங்காவை திறக்கும்படி போராட்டக்காரர்களும், நடை பயிற்சியாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: சுதந்திர பூங்காவில் மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 5 கோடி ரூபாய் செலவில், போராட்டக்காரர்களுக்கு அடிப்படை வசதிகள், கழிப்பறை, இருக்கை வசதி என, பல்வேறு பணிகளை ஜி.பி.ஏ., மேற்கொண்டுள்ளது. பணிகள் மும்முரமாக நடக்கின்றன. தற்போது பணிகள் நடப்பதால், பூங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வசதியும் இல்லை. பணிகள் முடியும் வரை, போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என, போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். பணிகள் முடிந்த பின், நடை பயிற்சிக்கு, படப்பிடிப்புக்கு, போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.