| ADDED : ஆக 26, 2026 02:48 AM
பெங்களூரு: என்னை இவர்கள் அமைச்சராக்க மாட்டார்கள் என்று, காங்கிரஸ் மேலிடம் மீது, பங்காருபேட்டை எம்.எல்.ஏ., நாராயணசாமி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அப்போது நடந்த கேள்வி - பதில் அமர்வில், கோலாரின் பங்காருபேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி எழுந்து, தனது தொகுதி தொடர்பான கேள்விகளை, அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத்திடம் கேட்டு கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில்,''நாராயணசாமி மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். அமைச்சராகும் தகுதி அவருக்கு உள்ளது. அவருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்க கூடாது,'' என்று கேள்வி எழுப்பினார். 'நீங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. என்னை இவர்கள் அமைச்சராக்க மாட்டார்கள். நான் எனது வேலையை பார்க்கிறேன்' என்று கூறி விட்டு, நாராயணசாமி தொடர்ந்து பேசினார். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருவருக்கு கூட, அமைச்சர் பதவி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.