| ADDED : டிச 02, 2025 12:42 AM
புதுடில்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, ஓராண்டில் இல்லாத அளவுக்கு 0.40 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய செப்டம்பர் மாதத்தில் 4.60 சதவீதமாகவும், கடந்தாண்டு அக்டோபரில் 3.70 சதவீதமாகவும் இருந்தது. மின்சாரம், சுரங்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சியும் கடந்த மாதம் கணிசமாக குறைந்துள்ளது. தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி கடந்தாண்டு அக்டோபரில் 4.40 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் 1.80 சதவீதமாக குறைந்துள்ளது. சுரங்கத்துறை வளர்ச்சி 0.90 சதவீதத்திலிருந்து மைனஸ் 1.80 சதவீதமாகவும்; மின்சார துறை வளர்ச்சி 2 சதவீதத்திலிருந்து மைனஸ் 6.90 சதவீதமாகவும் சரிந்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, விடுமுறை நாட்கள் அதிகமாக இருந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும், மழை காரணமாக மின்சார தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், சராசரி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2.70 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4 சதவீதமாக இருந்தது.