புதிய எல்.பி.ஜி., ஆட்டோ பதிவில் தாமதத்தை தவிர்க்க வலியுறுத்தல்
புதுடில்லி:தமிழகத்தில் புதிய எல்.பி.ஜி., ஆட்டோ பதிவு செய்வதை எளிமையாக்கி, தாமதத்தை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு, இந்தியன் ஆட்டோ எல்.பி.ஜி.,கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்து உள்ளதாவது: தற்போதைய பதிவு நடைமுறையில், பழைய வாகனங்களை எல்.பி.ஜி.,யாக மாற்றுவதற்கு முன்னுரிமை தரப்படுவதால், புதிய எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு செய்வதில், அதிக தாமதம் ஏற்படுகிறது. நடைமுறைக்கு ஏற்ற, செலவு குறைவானது ஆட்டோ எல்.பி.ஜி., என்பதுடன், மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் துாய எரிபொருள் தீர்வை அளிக்கும் என்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளது. எனவே புதிய எல்.பி.ஜி., ஆட்டோ பதிவு செய்வதில் நிலவும் தேவையற்ற தாமதங்கள், ஒழுங்குமுறை கெடுபிடிகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.