| ADDED : ஆக 18, 2024 11:26 PM
பெங்களூரு : உலக பிரசித்தி பெற்ற லால்பாக் பூங்காவின் மலர் கண்காட்சி இன்று நிறைவடைகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரின், லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 8ல் துவங்கிய மலர் கண்காட்சி, இன்று நிறைவடைகிறது. கடந்த 10 நாட்களாக, லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வெளிநாடுகளின் சுற்றுலா பயணியரும், மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.விடுமுறை நாட்களில் இவர்களின் எண்ணிக்கை, மிக அதிகமாக இருந்தது. நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், மலர் கண்காட்சிக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.ஆண்டுதோறும் ஒவ்வொரு சிறப்பு அம்சத்துடன், தோட்டக்கலைத்துறை மலர் கண்காட்சியை நடத்துகிறது. இம்முறை, அரசியல் சாசனத்தை வகுத்த அம்பேத்கருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை, பூக்களின் வடிவில் கொண்டு வந்தது.தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெகதீஷ், நேற்று அளித்த பேட்டி:தினமும் லட்சக்கணக்கான மக்கள், கண்காட்சியை பார்வையிட்டனர். மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியும் வருகை தந்து பாராட்டினார். பயனுள்ள சில ஆலோசனைகள் கூறினார். சித்தராமையாவால் துவக்கி வைக்கப்பட்ட மலர் கண்காட்சியை காண, பல முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர்.அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, இத்தாலியின் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். நேற்று (முன் தினம்) வரை, 7 லட்சம் மக்கள் வந்தனர். 2.40 கோடி ரூபாய் நுழைவு கட்டணம் வசூலானது.இவ்வாறு அவர் கூறினார்.