உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கையெழுத்து இயக்கம் துவங்கியது ஆம் ஆத்மி

கையெழுத்து இயக்கம் துவங்கியது ஆம் ஆத்மி

புதுடில்லி:கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி துவங்கியுள்ளது.மதுபானக் கொள்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது மே 7 வரை திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் கைதை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளது.இதற்காக கெஜ்ரிவாலுக்கு தாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்திகளை மக்கள் தெரிவிப்பதற்காக லஜ்பத் நகரில் இரண்டு வெள்ளை பலகைகளை ஆம் ஆத்மி வைத்துள்ளது.''தங்கள் முதல்வரை டில்லி மக்கள் நேசிக்கிறார்கள் என்பதை பா.ஜ.,வுக்கு உணர்த்தும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்,'' என, ஆம் ஆத்மி ஜங்புரா எம்.எல்.ஏ., பிரவீன் குமார் கூறினார்.நிகழ்ச்சியில், 'சிறைக்கான பதில் ஓட்டு மூலம்; அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத்' ஆகிய வாசகங்களை அந்த பலகையில் கட்சித் தொண்டர்கள் எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ