பெங்களூரு, : 'ராம்நகர் பெயரை மாற்றுவதற்கு பதிலாக, ராம்நகர் பெயரிலேயே மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை,' என பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் தெரிவித்தார்.இதுதொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுக்கு அவர் எழுதிய கடிதம்:பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றத்தினால் மட்டுமே, ராம்நகர் வளர்ச்சி அடையும் என, நினைப்பது சரியல்ல. ராம்நகர், 1986 வரை பெங்களூரு நகர் மாவட்டம், 2007 வரை பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் அங்கமாக இருந்தது. அப்படியிருந்தும் ராம்நகர் ஏன் வளர்ச்சி அடையவில்லை?நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை மனதில் கொண்டு, 17 ஆண்டுகளுக்கு முன்பு, ராம்நகர் மாவட்டம் உருவானது. ஏற்கனவே விஸ்தாரமாக வளர்ந்துள்ள பெங்களூரு நகருக்கு, அடிப்படை வசதிகள் செய்வது பெரும் சவாலாக உள்ளது.இச்சூழ்நிலையில், அழகான ராம்நகரை பெங்களூரில் சேர்ப்பது விவேகமற்ற செயலாகும். மாவட்டம் விவசாயிகளின் மாவட்டமாக இருக்க வேண்டுமே தவிர, ரியல் எஸ்டேட் தொழில் மையமாக மாறக் கூடாது.இங்குள்ள நிலத்துக்கு அதிக விலை கிடைப்பதற்கு பதிலாக, இந்த பூமியில் விளையும் விளைச்சல்களுக்கு, நியாயமான விலை கிடைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். ராம்நகருக்கு புராண, வரலாற்று பின்னணி உள்ளது. முதல்வர் பதவி
ஆதி சுஞ்சனகிரியின் பால கங்காதரநாத சுவாமிகள், சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகள், பெங்களூரை உருவாக்கிய கெம்பேகவுடா உள்ளிட்டோர், ராம்நகரைச் சேர்ந்தவர்கள். இம்மாவட்டம் மாநிலத்தில் ஐந்து பேருக்கு முதல்வர் பதவி கொடுத்தது. 'பட்டு நாடு'
இங்கு வெற்றி பெற்று முதல்வரான தேவகவுடா, பிரதமராகவும் பதவி வகித்தார். 'பட்டு நாடு' என பிரசித்தி பெற்றது. சிறப்பான மலைகள், கோவில்கள், ஆறுகள் உட்பட, பல பெருமைகளை கொண்டுள்ளது.ஏற்கனவே பெங்களூரில் பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி உள்ளது. பெங்களூரு தெற்கு தாலுகா உள்ளது. இச்சூழ்நிலையில், ராம்நகரின் பெயரை பெங்களூரு தெற்கு என, மாற்றினால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.ராம்நகர் பெயரை மாற்றினால், வரும் நாட்களில் கோலார் மாவட்டத்துக்கு, பெங்களூரு கிழக்கு, சிக்கபல்லாபூருக்கு பெங்களூரு தெற்கு என, பெயர் சூட்டும்படி கோரிக்கை வரலாம்.ராம்நகர் பெயரை மாற்றுவதற்கு பதிலாக, ராம்நகர் பெயரிலேயே, மாவட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பெயரை பெங்களூரு தெற்கு என, மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. பெயர் மாற்றும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.