| ADDED : டிச 18, 2024 09:51 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி, பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் மருத்துவத்துறை இயக்குநர் அலுவலக பதிவுகளின்படி 600க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முறையான அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் பலரை பற்றிய தகவல்கள் 2008ம் ஆண்டு முதல் பணி பதிவேட்டில் இல்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மருத்துவக்கல்வி துறையின் தரவுகள்படி, 337 பேர் மருத்துவக் கல்லூரிகளில் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இவர்களில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோரும் அடக்கம். அவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட, 291 பேர் உரிய விளக்கம் அளித்துவிட்டனர்.இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் தொடர் விடுமுறை எடுத்து பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 33 பேரை மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். 3 பேர் மருத்துவக்கல்வி இயக்குநரால் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எவ்வித பதிலும் தராமல் இருந்த 17 அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விளக்கத்தை சமர்ப்பிக்காமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தனியார் துறையில் வேலை செய்து வரலாம் அல்லது வெளிநாடு சென்றிருக்கலாம் என்று மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.