பெங்களூரு; ''ஒரு காலத்தில் முதல்வர் சித்தராமையா, மிகவும் உறுதியாக புலி போல் இருந்தார். இப்போது ஏன் இப்படி ஆனார்?'' என, பா.ஜ., உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில் கட்சி பேதமின்றி பேசுவோம். அனைத்து தரப்பினரும் ஓட்டு போட்டால் மட்டுமே, நாம் எம்.எல்.ஏ.,வாக முடியும். அம்பேத்கர் பற்றி அனைவருக்கும் மிகவும் கவுரவம் உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கவில்லை. ஆனால், உயர்ஜாதியினர் ஒரு மாதிரியாக பேசி வந்தனர்.ஒருமுறை முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, அரசியலமைப்பு எப்படி உருவானது என்று விளக்கினார். அப்போது முதல், நானும் அம்பேத்கரை மதிப்பவனாக மாறினேன். முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தவுடன், அமைச்சர் நாகேந்திராவிடம் ராஜினாமா பெற்றனர். இந்த விஷயத்தில் முதல்வர் தவறு செய்துவிட்டார். வாஜ்பாய் ஆட்சி
குற்றச்சாட்டு எழுந்தவுடன், ஆணையத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். நிதித்துறையில் நேர்மை இல்லை. எஸ்.சி., - எஸ்.டி., துறை உயர் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அந்த சமுதாயங்களின் கடைகோடி மனிதர் கஷ்டப்படுவதை பார்த்தும் இப்படி செய்யலாமா?முதல்வர் சித்தராமையாவுக்கு என்று தனி கவுரவம் உள்ளது. அதிகாரம் கிடைக்கும்போது, வரலாறு பேசும்படி சாதனை செய்ய வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஒரு ஓட்டால் ஆட்சியை இழந்தார். அப்போது, அம்பரீஷ் ஒருவர் ஆதரவு தெரிவித்திருந்தால், ஆட்சி நிலைத்திருக்கும். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.தற்போது, முதல்வரின் பதவியை பறிக்க டில்லியில் சூழச்சி செய்கின்றனர். நாகேந்திரா வாயை திறந்தால், முக்கிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். இதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ள கூடாது. யாருக்கும் பயப்பட கூடாது. பாவம் இரண்டு நாட்களாக அவர் மவுனமாக அமர்ந்திருக்கிறார். என் ஆட்சிக்காலத்தில் முறைகேடு நடந்து விட்டதே என்று அவர் மனசாட்சி சொல்கிறது. சாபம் சும்மா விடுமா?
ஹூப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடத்தியபோது, சித்தராமையாவுக்கு ஆதரவாக நாங்கள் வந்தோம். பல்லாரி வரை பாதயாத்திரை சென்றார். ஒரு காலத்தில் முதல்வர் சித்தராமையா, மிகவும் உறுதியாக புலி போல் இருந்தார். இப்போது ஏன் இப்படி ஆனார்? மீண்டும் உறுதியானவராக மாற வேண்டும்.முறைகேடு நடந்த அதே 187 கோடி முறைகேடு பணத்தில், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கலாமே. ஏழைகள் பணத்தை சாப்பிட்டால் அந்த சாபம் சும்மா விடுமா?கலப்பு திருமணம் செய்து, ஜாதி, பேதம் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு எப்போது நிறைவேறும்? அவர்கள் பணத்தை சாப்பிட்டால், எப்படி நல்லது நடக்கும்?இதை சொன்னால், பா.ஜ., காலத்தில் நடக்கவில்லையா என்று கேட்பீர்கள். கட்சியை பார்க்காதீர்கள். நாங்களும், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில் போராட்டம் நடத்தினோம். சட்டசபையில், இரவு, பகல் பாராமல் தர்ணா நடத்தி சென்று விடுவோம். ஆனால், முறைகேடுக்கு தீர்வு கிடைக்குமா? யாருக்கும் பயப்படக் கூடாது. நல்லது செய்யுங்கள்
இதை பார்த்து ஊடகத்தினரும், 'சட்டசபையை மிரள வைத்த எதிர்க்கட்சியினர், நடுங்கிய அரசு' என, செய்திகள் வெளியிடுவர். மறுநாள் காலை முதல்வரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர், 'நான் என்ன செய்ய முடியும்? மேலிட நெருக்கடி சார்' என்று கூறி சென்று விடுவார்.எனவே முதல்வருக்கு சொல்வது ஒன்று தான். இது தான் நீங்கள் கடைசியாக முதல்வராக இருப்பது. மீண்டும் முதல்வராக வாய்ப்பு இல்லை. கவர்னராகவும் முடியாது. ஏனென்றால், இன்னும் 20 ஆண்டுகள் வரை மத்தியில், பா.ஜ., ஆட்சி தான் நடக்கும். கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு நல்லது செய்யுங்கள். இல்லை என்றால், ஜாமின் கொடுத்து விட்டு செல்லுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.