உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி 250 பேர் பலி!

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி 250 பேர் பலி!

வயநாடு : கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, 250 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. மாநிலத்தின் மிகவும் கொடூரமான இயற்கை சீற்றமாகக் கருதப்படும் இந்த நிலச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ள 225 பேரை தேடும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டியுள்ளது, கேரளத்தின் வயநாடு மாவட்டம். இங்கு, மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன.

வெள்ளம்

இந்த பகுதிகளில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்தது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. மழை எச்சரிக்கையால் முகாம்களில் தங்க வைத்திருந்த மக்கள், மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மலையில் இருந்து மரங்களையும், பாறைகளையும் அடித்து வந்தது வெள்ளம். விடுதிகளிலும் வீடுகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், வெள்ளத்தில் மிதந்து வந்தன. வெள்ளத்தின் விளைவாக நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது; ஆற்றின் கரைகள் உடைந்தன. சரிந்த மண்ணையும் இழுத்துக் கொண்டு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. உறங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணில் புதைந்தனர். சுவரிலும், பாறையிலும் மோதி சிதைந்த உடல்கள், மலப்புரம் சாலியாறு நோக்கி அடித்துச் செல்லப்பட்டன.சூரல்மலை பகுதியில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், முண்டக்கை பகுதிக்கு யாரும் செல்ல முடியாத நிலை உருவானது. அங்கு வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறி ஆனது. அவர்களை மீட்க என்ன செய்யலாம் என அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், சூரல்மலையிலும் காலை 4:00 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், இருவழிஞ்ஞி ஆறு இரண்டாகப் பிரிந்து, அந்த பகுதியை சூழ்ந்து கொண்டது. இதில் அந்த கிராமத்தினர் அடித்துச் செல்லப்பட்டனர். முண்டக்கையிலும், சூரல்மலையிலுமாக மூன்று இடங்களில் செங்குத்தான நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சாலியாறு வழியாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சடலங்கள், சூரல்மலையில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ள போத்துகல் பகுதியில் கரை ஒதுங்கின.

புதையுண்டன

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்த 100 வீடுகள் என்ன ஆயிற்று என்றே தெரியாத அளவுக்கு, மண்ணில் புதையுண்டன. கரையோரம் இருந்த மேலும் 500 வீடுகள், இருந்த சுவடே காணாமல் போயின. பள்ளிகள், வழிபாட்டு தலங்களையும் காணவில்லை. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, முப்படைகளும் மீட்புப் பணியில் இறங்க மத்திய அரசு உத்தரவிட்டது. ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த, 43 பேர் அடங்கிய குழு உடனடியாக அனுப்பப்பட்டது. மற்ற இடங்களில் இருந்து 200 வீரர்கள் அனுப்பப்பட்டனர். கடற்படையின் நீச்சல் வீரர்களும் விரைந்தனர். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டன. மோசமான நிலச்சரிவு என்பதால், எங்கு பார்த்தாலும், சேறும் சகதியுமாக இருந்தது. வெள்ளம் வடியவும் நேரம் பிடித்தது. இதனால், மீட்புப் படையினரால் சம்பவ இடங்களை உடனடியாக அடைய முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்; இன்று மதியம வரை, 224 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 225 பேரை காணவில்லை. 3,000 பேருக்கு மேல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விடிய விடிய மீட்பு பணி தொடர்ந்தது. கேரளாவின் மிகப் பெரும் இயற்கை பேரழிவு இது என முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், விஜயனிடம் பேசினர். மத்திய அரசு தரப்பில் எல்லா உதவிகளும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். பார்லி.,யிலும் வயநாடு சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அமைச்சர்களுடன் பேசினார். வயநாடு தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ராகுல், அங்குள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு, லோக்சபாவில் அரசை கேட்டுக் கொண்டார். ராஜ்யசபாவில் சபை அலுவல்களை ஒத்தி வைத்து இந்த பேரிடர் குறித்து பேச வேண்டும் என, கேரளா எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். அவர்கள் பேச அனுமதிக்கும்படி, எதிர்க்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார். அதையடுத்து, எம்.பி.,க்கள் பேசுவதற்கு, சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி அளித்தார்.

வயநாடுக்கு ரெட் அலர்ட்!

நிலச்சரிவு பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், வயநாடு மற்றும் அதன் அருகில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார் மாவட்டங்களுக்கு, அதி தீவிர மழைக்கான, ரெட் அலர்ட் எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.இதைத் தவிர, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையின்படி, 24 மணி நேரத்தில், 20 செ.மீ.,க்கு அதிகமாகவும், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையின்படி, 11 - 20 செ.மீ., வரை மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

ஆற்றில் மிதந்த உடல்கள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த, 3 வயது குழந்தை உட்பட, 26 பேரின் உடல்கள், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியாறு ஆற்றின் இருட்டுக்குத்தி, பொதுகல்லு, பனங்காயம், பூதானம் உள்ளிட்ட பகுதிகளில் மிதந்த நிலையில், நேற்று கண்டெடுக்கப்பட்டன. கை, கால்கள் மற்றும் தலைகள் கூட இல்லாத நிலையில், சில உடல்கள் ஆற்றின் கரையில் கரை ஒதுங்கின.

100 தொழிலாளர்கள் மாயம்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியில் உள்ள தேயிலை, காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட, நுாற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். ஹாரிசன்ஸ் மலையாள பிளாண்டேஷன் நிறுவன பொது மேலாளர் பெனில் ஜான் கூறுகையில், ''முண்டக்கை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், எங்கள் நிறுவனம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 600 பேர் பணிபுரிந்து வந்தனர்.''மொபைல் போன் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டு விட்டதால், ஏராளமான தொழிலாளர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுவரை, எங்கள் நிறுவனத்தின் ஐந்து ஊழியர்களின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 35 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் காணவில்லை,'' என்றார்.

மோசமான வானிலை

கல்பெட்டா எம்.எல்.ஏ., டி.சித்திக் கூறுகையில், ''முண்டக்கை பகுதியில் ஏராளமானோர் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களது நிலைமை மோசமாக இருக்கிறது. அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாலை 5:00 மணிக்கு பின், முண்டக்கை பகுதி இருட்டாகி விடும். அதற்குள் முடிந்த மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.மோசமான வானிலை காரணமாக, நம் விமானப்படையின் ஹெலிகாப்டரால், முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணியை ஒருங்கிணைக்க5 அமைச்சர்கள்

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியை ஒருங்கிணைக்க, கேரள அமைச்சர்கள் ஏ.கே.சசீந்திரன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் உட்பட ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வயநாட்டில் தங்கியிருந்து மீட்புப் பணிகளை கண்காணிக்க உள்ளனர். மேலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின், குன்னுாரின் வெலிங்டனில் உள்ள ராணுவ தலைமையகத்திலிருந்து ராணுவக் குழுவினரும் வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, தீயணைப்புப் படை, காவல் துறை, வனம் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள், நிலப்பரப்பை நன்கு அறிந்த ஏராளமான உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளனர்.

பள்ளியில் தங்கியிருந்தோர் நிலை?

வயநாட்டில் கனமழையைத் தொடர்ந்து, வெள்ளர்மல்லில் செயல்படும் அரசு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று முன்தினம் பல குடும்பங்கள் தங்கி இருந்தன. நேற்று அதிகாலை கனமழை தீவிரமடைந்ததை அடுத்து, சிலர் பள்ளியில் இருந்து வெளியேறினர். எனினும், சிலர் பள்ளியிலேயே தங்கினர். தற்போது நிலச்சரிவால் இந்த பள்ளி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றி சேறும், சகதியுமாக உள்ளது. இதில் தங்கியிருந்தோரின் நிலை குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நிலச்சரிவுக்கு என்ன காரணம்?

நிலச்சரிவு ஏற்படுவதற்கு மூன்று முதன்மையான காரணங்களை நிபுணர்கள் வரிசைப்படுத்துகின்றனர். 1. புவியியல், 2. உருவவியல், 3. மனித செயல்பாடு.* புவியியல் என்பது நிலத்தின் தன்மையுடன் தொடர்புடையது. பூமி அல்லது பாறை பலவீனமாக இருக்கலாம். அதில் விரிசல்கள் இருக்கலாம். நிலத்தின் வெவ்வேறு அடுக்குகள் வெவ்வேறு வலிமை மற்றும் உறுதித்தன்மை கொண்டிருக்கலாம்.* உருவவியல் என்பது நிலத்தின் அமைப்பை குறிக்கிறது. உதாரணமாக, காட்டுத் தீ அல்லது வறட்சியினால் தாவரங்களை இழக்கும் மலைச்சரிவுகளில் மிக எளிதாக நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தாவரங்கள் மண்ணை உறுதியுடன் தக்கவைத்துக் கொள்கின்றன. மேலும் மரங்கள், புதர்கள் மற்றும் பிற தாவரங்களின் வேர் அமைப்புகள் இல்லாமல், நிலம் உறுதித்தன்மையை இழந்து, எளிதில் சரிய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.* அதோடு, விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்ற மனித செயல்பாடுகள், நிலச்சரிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. நீர்ப்பாசனம், வனங்கள் அழிப்பு, அகழ்வாராய்ச்சி மற்றும் நீர்க்கசிவு உள்ளிட்டவை சரிவான பகுதிகளை சீர்குலைக்கவும், பலவீனப்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் அதிக நிலச்சரிவுகள்

அசாமின் குவஹாத்தியை சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் பார்த்தா ஜோதி தாஸ் கூறியதாவது: மலைகளின் பலகீனமான நிலப்பரப்பில் தேவையற்ற, நடைமுறைக்கு மாறான அல்லது திட்டமிடப்படாத கட்டுமானங்கள் குறுக்கிடும் போது, நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக காடுகளை அழிப்பதால், மண் வலுவிழக்கிறது. உயரத்தில் இருந்து வரும் மழைநீர் மண் சரிவை ஏற்படுத்துகிறது. ரயில் பாதை விரிவாக்கம், சாலை மற்றும் பாலங்கள் அமைப்பது போன்ற பணிகளால், மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சீர்குலைகின்றன.பொதுவாக, 50 முதல் 60 சதவீத மழைநீரை பூமி உள்வாங்கிக் கொள்கிறது. நிலப்பரப்பின் சீரழிவு காரணமாக, பூமிக்கும் நீர் ஊடுருவுவது தடைபடுகிறது. தாவர வடிவங்களின் மாற்றத்தால் மண் தாங்கும் திறனை இழக்கிறது. இதனால் நிலத்தில் நீர் தேங்கி, மண் தளர்ந்து, நிலச்சரிவு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழர்கள் 9 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 9 பேர் பலி; 30 பேர் மாயம் என தகவல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Narayanan
ஜூலை 31, 2024 15:59

ராகுலும் , அவரது சகோதரியும் வயநாடு வருகிறார்கள் . அவர்களை அங்கேயே தங்க வையுங்கள் . அனைவரையும் மீட்டு கொடுப்பார்கள் . நிலைமை சீராகும் வரி அவர்களை அங்கேயே வைத்துக்கொள்ளுங்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 12:39

மனிதத் தவறுகளே காரணம் என்று புரிய வருவதால் இப்போது வருந்திப் பயனில்லை ... இயற்கையை அழிக்க முயற்சி செய்தால் தீங்கு மனிதனுக்கே .........


Mohan
ஜூலை 31, 2024 10:19

ம் ..அந்த ஏரியா ல நெறய மக்கள் தொகை இருக்கும் நல்லா தேடுங்க ...எல்லாம் வெளிநாட்டு காசு போட்டு பெரிய பெரிய பங்களாவை கட்டி இருப்பாங்க ...


Balaji Ramanathanfeellikebecoming shiva
ஜூலை 31, 2024 10:19

When atrocities going high nature will revenge automatically. Nobody is superior in this world. We should try to live clean hands and clear mind to avoid things like this in future atleast.


N.Purushothaman
ஜூலை 31, 2024 06:51

இயற்க்கை சொல்லும் பாடம் இது தான் ...இயற்கையை அனுபவித்து கொள்ளலாம் ...ஆனால் அதை சிதைத்து அதன் வளங்களை கொள்ளையடித்து நாசப்படுத்தினால் அதுவும் பழிக்கு பழி வாங்கும் ....எப்போதும் போல இதிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி பொது மக்களே ....தமிழகத்திலும் இது போன்ற நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் ....மலை மாவட்டங்கள் பகுதிகள் மற்றும் இயற்க்கை வளங்கள் உள்ள பகுதிகளை வளங்கள் கொள்ளை மூலம் சூறையாடி கொண்டு இருக்கிறோம் ...


chennai sivakumar
ஜூலை 31, 2024 06:28

மிகவும் வருத்தமாக இருக்கிறது


ram
ஜூலை 31, 2024 10:41

ரொம்ப வருத்த படாதீர்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை