சிக்னேச்சர் வியூ கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி:'சிக்னேச்சர் வியூ அப்பார்ட்மென்டு'களை இடிக்க உத்தரவிட்ட, ஒரு நபர் நீதிபதியின் உத்தரவை, தலைமை நீதிபதி தலைமையிலான டில்லி உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டு, உடனடியாக அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. டில்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் போது, வெளிநாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக, தலைநகர் டில்லியில் உள்ள முகர்ஜி நகர் பகுதியில், 12 டவர்களுடன் 336 பிளாட்டுகள் கட்டப்பட்டன. விளையாட்டு போட்டிகள் முடிந்த பிறகு, அந்த பிளாட்டுகளை, பலருக்கும் கொடுத்தது, டில்லி வளர்ச்சி ஆணையம் எனப்படும் டி.டி.ஏ., அதன் பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, அந்த கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதும், சில அடிப்படை தன்மைகளைக் கூட, அந்த கட்டடம் கட்டும் போது, மேற்கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதையடுத்து, 2023 டிசம்பர் 18ல், டில்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி பிறப்பித்த உத்தரவு படி, அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மன்மோகன் சிங் அட்ரி என்பவர் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் துஷார் ராவ் கெடிலா ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச், ஒரு நீதிபதி பிறப்பித்த உத்தரவை அப்படியே மாற்றம் இல்லாமல் ஏற்றுக் கொண்டது. மேலும், சிக்னேச்சர் வியூ அப்பார்ட்மென்ட் என்ற கட்டட வளாகத்தை, உடனடியாக இடித்து தரை மட்டமாக்கவும் உத்தரவிட்டது.