சென்னை: சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில், தென் மாநில உணவுகளை இலவசமாக வழங்க உள்ளதாக, 'ஏர் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை-யில் இருந்து துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில், தென் மாநில உணவுகள் இலவசமாக வழங்கப்படும். தென் மாநில உணவுகளில் குறிப்பாக, தமிழகத்தின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி ஆகியவை வழங்கப்படும். இது மட்டுமின்றி, பிரியாணி, மலபாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப் மற்றும் வட மாநில சைவ, அசைவ உணவுகள், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவுகள், ஜப்பான் நாட்டு உணவுகளும் வழங்கப்படும். பயணியர் விமான டிக்கெட் புக்கிங் செய்யும்போது, சைவமா அல்லது அசைவமா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக, சர்வதேச விமானங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது; பயணியரின் வரவேற்பை பொறுத்து, உள்நாட்டு விமான சேவையிலும் சேர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.