உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் கேடு விளைவிக்கும் உணவுப் பழக்க வழக்கம்

மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம், அவர்களது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளது என்பதை ஆராயும் வட்ட மேஜை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவில் ரூ.8000 கோடி முதலீட்டில் ஏராளமான ஜங்க் புட் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருவதும், ஜங்க் புட் உண்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் உடல் நலக் கோளாறுகளுமே, இந்த வட்ட மேஜை மாநாடு நடத்தப்படக் காரணமாகும். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், மருத்துவர்கள், சத்துணவு நிபுணர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பலதரப்பட்டவர்கள் பங்கேற்று அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஜங்க் உணவுகளை உண்ணும் குழந்தைகளுக்கு ஜீரணக் கோளாறு, உடல் பருமன், நீரிழிவு, முதுமையான தோற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. காய்கறிகளால் செய்யப்பட்டிருந்தாலும், சில உணவுகளில் சேர்க்கப்படும் பிற பொருட்களால் அவை ஜங்க் புட் என்றே கருதப்படும். பிட்சாவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டாலும், அதில் உள்ள பன் மற்றும் சீஸ் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்தை நிச்சயம் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறினர். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமே உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட பெரிய மாறுதல்தான். ஜங்க் உணவுகளை விட்டு சத்துணவிற்கு மாறும் நிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளியிலும், பள்ளிக்கு மிக அருகாமையிலும் உள்ள கடைகளில் இதுபோன்ற உணவுகள் விற்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பள்ளியில் இருந்தே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜங்க் புட் பற்றிய விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்த வேண்டும். மிக விரைவாக சத்தான உணவை எவ்வாறு தயாரிப்பது என்று பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான டிவி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஜங்க் உணவுகளுக்கான விளம்பரம் இடம்பெறுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜங்க் உணவுகளுக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தி அதனை சத்துணவு தயாரிப்பு பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல ஆலோசனைகளையும் பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !