வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் வேளாண் பல்கலை கழகம் தகவல்
கரூர்: வரும் டிசம்பர் வரை, வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் என, தமிழ்நாடு கோவை வேளாண்மை பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலை கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:நாட்டில் வடகிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை அதிகம் சாகுபடியாகிறது. பண்டிகை காலங்களில், வாழையின் தேவை அதிகரித்தாலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும், தொடர் மழையால் வாழை சேதம் அடைந்துள்ளதாக அறியப்படுகிறது.இதனால், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க வசதியாக கடந்த, 19 ஆண்டுகளாக கோவை சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வகை வாழை விலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், நடப்பு அக்டோபர் முதல், டிசம்பர் வரை வாழைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.குறிப்பாக, பூவன் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு, 26 முதல், 28 ரூபாயாகவும், கற்பூரவள்ளி, 28 முதல், 30 ரூபாயாகவும், நேந்திரன் கிலோவுக்கு, 38 முதல், 40 ரூபாயாகவும் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் இந்த அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 0422-2431405, 0422-6611269 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.