பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
சென்னை: பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பின், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும், பெற்றோர் ஆசிரியர் கழகம் பதிவு செய்யப்பட்ட சங்கமாக செயல்படுகிறது. இதன் பொதுக்குழு கூட்டம், ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக நடத்தப்படாமல் முடங்கி கிடந்தது.இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார். இதில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.தலைவராக அமைச்சர் மகேஷ், துணை தலைவர்களாக பள்ளிக்கல்வி துறை செயலர் குமரகுருபரன், இயக்குனர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜ முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெற்றோர், ஆசிரியர் கழக நிதிக்கான வரவு செலவு கணக்கும் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.