உதவித்தொகை இணையதளம் அடுத்த மாதம் துவக்கம்
சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின், கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம், அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது.போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான, பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் போன்றவை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்களுக்கான இணையதளம், அக்டோபரில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள், ஆதார், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை, தயாராக வைத்திருக்க வேண்டும்.ஜாதி சான்று மற்றும் வருமான சான்று போன்றவை, இணைய சான்றுகளாக இருக்க வேண்டும். அவற்றை பெற, இ - சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாரில் உள்ள விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவரின் வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இணைக்காதவர்கள் வங்கிகளை அணுகி, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இவ்விபரங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், மாணவர்களுக்கு தெரிவித்து, தயார் நிலையில் ஆவணங்களை வைத்திருக்க உதவ வேண்டும் என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.