சிறப்பு விமான கண்காட்சி; பார்வையாளர்களுக்கு இலவசம்
தசரா விழாவை ஒட்டி, சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் விமான கண்காட்சி நடத்தப்பட்டது. கொரோனாவுக்கு பின் நடந்த தசரா விழாவில் நடத்தப்படவில்லை. இம்முறை விமான கண்காட்சி நடத்தும்படி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இவரை கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.அதன்படி, நகரின் பன்னி மண்டப மைதானத்தில் இன்றும், நாளையும் சிறப்பு விமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை வீரர்கள் வானில் சாகசம் நிகழ்த்த உள்ளனர்.இரண்டு நாட்களும் மாலை 4:00 மணிக்கு கண்காட்சி நடக்கிறது. பொது மக்கள் மாலை 3:00 மணிக்குள் மைதானத்துக்குள் அமர வேண்டும். அதன் பின், வருவோருக்கு அனுமதி இல்லை. அனைவரும் இலவசமாக கண்டு ரசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, பார்வையாளர்கள், தொப்பிகளை அணிந்து வரும்படி கலெக்டர் ராஜேந்திரா கேட்டுக் கொண்டுள்ளார். விமான கண்காட்சிக்கு பின், இரவு 7:00 மணிக்கு தீப்பந்த நிகழ்ச்சி ஒத்திகை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், மைசூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஸ் பெற்று வர வேண்டும்.